ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை- ராணி மேரி கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நேற்று பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்படுகின்றன. இந்த வாக்குகள் எண்ணப்படும் சென்னை ராணி மேரி கல்லூரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அமைதியான முறையில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்தது. இத்தேர்தலில் 74.4% வாக்குகள் பதிவாகின.

தொகுதியில் உள்ள 230 வாக்குச்சாவடிகளிலும் மாலை வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து வாகனங்களில் ஏற்றப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ராணிமேரி கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன.
அங்கு தனி அறையில் அவை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன. தேர்தல் ஆணைய அதிகாரிகள் அந்த அறையை பூட்டி சீல்வைத்தனர். இதன் அருகில் யாரும் சென்றுவிட முடியாத அளவுக்கு துணை ராணுவ படையினரும், போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வாக்குகள் அனைத்தும் வருகிற 30-ந் தேதி எண்ணப்படுகிறது. இதனால் ராணிமேரி கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 30-ந் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நீடிக்கும்.












Click it and Unblock the Notifications