ஆர்.கே.நகரில் திமுக தோற்றால் ஸ்டாலின் நிலை?
திமுக தோல்வியடைந்தால் யாரையும் கை காட்ட முடியாது. கை காட்டும் திசையில் நிற்பவர் ஸ்டாலினாக மட்டுமே இருப்பார். எனவேதான் இது ஸ்டாலினுக்கு அக்னி பரிட்சை.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றேயாக வேண்டிய கட்டாயம் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் அணியை விட மிக அதிகமாக இருப்பது திமுகவுக்குதான்.
இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்றேயாக வேண்டியது ஆளும் கட்சிக்கு கவுரவ பிரச்சினையாக பார்க்கப்படும் நிலை தற்போதைய சூழலில் எதிர்க்கட்சிக்கே சாலப்பொருந்தும்.
திமுக தலைவர் கருணாநிதி, களத்திற்கே வராமல், மு.க.ஸ்டாலின் தலைமையில், தேர்தலை சந்திக்கப்போகிறது திமுக. ஸ்டாலினின் தலைமை திறமையை 100 சதவீதம் பரிசோதித்து பார்க்கப்போகும் தேர்தல் இது.

விமர்சனங்கள்
ஜென்டில்மேன் பாலிடிக்ஸ் செய்கிறார், கூவத்தூரில் அடைக்கப்பட்ட எம்.எல்.ஏக்களை வளைக்க தெரியவில்லை, கட்சிக்குள் அனைவரையும் அரவணைப்பதில்லை, கூட்டணி பலத்தை மதித்து அனைத்து கட்சிகளையும் தனது தந்தையை போல அரவணைப்பதில்லை என்ற விமர்சனங்களையெல்லாம் தாண்டி, 2016 சட்டசபை தேர்தலில் திமுக 39.7 சதவீதம் வாக்குகள் பெறுவதற்கு பெரும் காரணமாக இருந்தது ஸ்டாலினின் அயராத உழைப்பு என்பதில் ஐயமிருக்க முடியாது.

தவறவிட்டது வரலாறு
அதேநேரம், கூட்டணியை அமைப்பதில் தவறவிட்டதும் ஸ்டாலின்தான். அவரது நடவடிக்கையால்தான் தொடர்ந்து 2வது முறையாக அதிமுக ஆட்சியை பிடித்தது என கூறப்படும் விமர்சனத்தையும் புறம் தள்ள முடியாது. அதிமுக பெற்ற வாக்குகள் 40.8 சதவீதம். கிட்டத்தட்ட 1 சதவீத வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவிடம் தோற்றது திமுக.

கட்டாயத்தில் திமுக
இந்த நிலையில்தான், இனி வரும் உள்ளாட்சி தேர்தல், லோக்சபா தேர்தலுக்கு திமுகவின் வலிமையை காட்டும் வகையில், ஆர்.கே.நகரில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது திமுகவுக்கு. எதிராளிகள் மூன்று பிரிவுகளாக பிளவுபட்டு நிற்கும் இந்த களத்தில் கூட திமுக வெல்லாவிட்டால் ஸ்டாலினின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

பிம்பம் இல்லை
எதிராளியான அதிமுகவின் பிரமாண்ட தலைமையான ஜெயலலிதா இப்போது இல்லை. அக்கட்சியின் சின்னமும் இல்லை. ஏன், அந்த கட்சி பெயரை கூட உச்சரிக்க முடியாமல்தான் எதிரணியினர் பிரசாரம் செய்தாக வேண்டும். கிட்டத்தட்ட எதிராளியே இல்லாத களத்தில் வாளை வீசுவதை போன்ற செயல்தான் இது.

எளிய இலக்கு
டி20 போட்டி டிரா ஆனால், வெறும் ஸ்டெம்புகளை நட்டு வைத்து எத்தனை முறை பௌல்ட் செய்கிறார் என பார்க்க பவுலர் கையில் பந்து கொடுக்கப்படும். அந்த பவுலர் நிலையில் ஸ்டாலின் உள்ளார். பேட்ஸ்மேன் இல்லாமல் வெறுமனே நட்டு வைக்கப்பட்டிருக்கும் ஸ்டெம்பை குறிபார்த்து அடிக்கத்தெரியாவிட்டால் அந்த பவுலருக்கு எப்படி மரியாதை கிடைக்கும்?

அதிமுக வாக்குகள் பிரியும்
அதிமுகவின் வாக்குகள் டிடிவி தினகரன், தீபா, மதுசூதனன் என மூன்றாக பிரியும். அவ்வளவு ஏன், பாஜக வேட்பாளர் கூட அதிமுகவின் வழக்கமான வாக்கு வங்கியிலிருந்து வாக்குகளை பெற வாய்ப்புள்ளது. ஆனால், திமுகவுக்கான ஓட்டுகளோ அப்படியே இருக்கும். மார்க்சிஸ்ட், நாம் தமிழர், சமத்துவ மக்கள் கட்சி போன்றவை ஒரளவுக்கு வாக்குகளை பிரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் இது திமுகவுக்கு பெரிய பாதிப்பை தராது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

சின்னம் லிஸ்ட்
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு பதிலாக ஓ.பி.எஸ் அணிக்கு மின் கம்பமும், சசிகலா அணிக்கு தொப்பியும் வழங்கப்பட்டுள்ளது. சுயேட்சை என்ற கணக்கில்தான் இது வரும் என்பதால், திமுக, பாஜக போன்ற அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னங்களுக்கு கீழேத்தான், அவர்களது சின்னங்கள் இடம் பிடிக்கும். சாமானிய வாக்காளனின் மனநிலை மேலே உள்ள சின்னங்களுக்கு வாக்களிப்பதுதான். இதுவும் திமுகவுக்கு சாதகம்.

அக்னி பரிட்சை
இத்தனை சாதகங்களையும், பாதகமாக்கி, திமுக தோல்வியடைந்தால், "இடைத் தேர்தல் என்பதால்தான் ஆளும் கட்சி வெற்றி பெற்றுவிட்டது" என்று கூட கூற முடியாது. ஏனெனில் இப்போது ஆளும் கட்சி என்பதே மூன்றாக உள்ளது. தினகரன் தோல்வியடைந்தால் ஓ.பி.எஸ்சை குற்றம்சாட்டி தப்பலாம். மதுசூதனன் தோற்றால், தினகரனையும், தீபாவையும் குற்றம்சாட்டி தப்பலாம். ஆனால் திமுக தோல்வியடைந்தால் யாரையும் கை காட்ட முடியாது. கை காட்டும் திசையில் நிற்பவர் ஸ்டாலினாக மட்டுமே இருப்பார். எனவேதான் இது ஸ்டாலினுக்கு அக்னி பரிட்சை.












Click it and Unblock the Notifications