வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி சிதம்பரத்தில் சாலை மறியல்: ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
சிதம்பரம்: சிதம்பரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சுமார் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்த்தது. அதன் ஒரு பகுதியாக சிதம்பரம் பகுதியில் பெய்த கனமழைக்கு அங்குள்ள முத்துகாமாட்சியம்மன் தோட்டப்பகுதியில் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் வீடுகளை இழந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து நிவாரணம் வழங்கக்கோரி அந்த பகுதியைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிதம்பரம் - கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். இதனால் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல சிதம்பரம் மந்தகரை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நிவாரணம் வழங்க வேண்டி சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் வருவாய்துறை அதிகாரிகள் சமாதானம் பேசி பொதுமக்களை கலைந்து போகச்செய்தனர்.












Click it and Unblock the Notifications