அண்ணா சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்!
சென்னை அண்ணா சாலை அருகே திடீரென ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை: சென்னை அண்ணா சாலை அருகே இன்று திடீரென பள்ளம் ஏற்பட்டதால் சேதமடைந்த சாலையை சிமென்ட் கலவை மூலம் சரி செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.
அண்ணா சதுக்கத்திலிருந்து வடபழனி நோக்கி சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து ஒன்று சர்ச் பார்க் கான்வென்ட் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் நின்றது. அப்போது பேருந்து பள்ளத்தில் இறங்குவதை உணர்ந்த டிரைவர் 30-க்கும் மேற்பட்ட பயணிகளை பாதுகாப்பாக கீழே இறக்கிவிட்டார். அப்போது 10 அடி ஆழத்திலான பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது.

இதைத் தொடர்ந்து அந்த பேருந்தை முந்த முயன்ற முகப்பேர் மருத்துவர் பிரதீப்புக்கு சொந்தமான காரும் அந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் காரும், பேருந்தும் கடுமையாக சேதமடைந்தன.
தற்போது ஆயிரம் விளக்கு பகுதியிலிருந்து டிஎம்எஸ் வரை மெட்ரோ ரயில் சுரங்க பணிகள் நடைபெற்று வருவதால் இந்த பள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அது முக்கிய சாலை என்பதால் நாளை மாலைக்குள் சாலை சீரமைக்கப்பட்டு வாகன பயன்பாட்டுக்கு விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த பள்ளத்தில் சிமென்ட் கலவை கொட்டப்பட்டு சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கியது.












Click it and Unblock the Notifications