மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளை தேசியமயமாக்க வேண்டும்: ஆளுநர் ரோசய்யா வலியுறுத்தல்
சென்னை: மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளை முன்னுரிமை அடிப்படையில் மத்திய அரசு தேசியமயமாக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ரோசய்யா வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டசபையில் புதன்கிழமையன்று ஆளுநர் ரோசய்யா ஆற்றிய உரையில் கூறப்பட்டுள்ளதாவது:
மாநிலங்களுக்கிடையேயான பல்வேறு நதிநீர்ப் பிரச்சினைகளில், மாநிலத்தின் சட்டபூர்வ உரிமைகளை நிலைநாட்டிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்ட அயரா முயற்சிகளும், அவற்றில் அவர் கண்ட வெற்றிகளும் நாம் அனைவரும் அறிந்தவையே.
2014 ஆம் ஆண்டு மே திங்களில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முதற்கட்டமாக 142 அடி அளவிற்கு தமிழ்நாடு உயர்த்திக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு, இத்தகைய பாராட்டத்தக்க வெற்றிகளுள் ஒன்றாகும்.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில், 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலும், 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும் நீர்மட்டத்தை 142 அடி அளவிற்கு மாநில அரசு உயர்த்தியதற்கு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எடுத்த ஒருங்கிணைந்த தொடர்முயற்சிகளின் பலனாகப் பெற்ற மேற்கூறிய தீர்ப்பே முழுக் காரணமாகும்.
அணையின் முழுக் கொள்ளளவான 152 அடி உயரத்திற்கு நீர்மட்டத்தை மேலும் உயர்த்திடத் தேவையான நடவடிக்கைகளையும் இந்த அரசு தொடங்கியுள்ளது.
காவேரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பினை மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பாணையாக 19.02.2013 நாளிட்ட அரசிதழில் மத்திய அரசு வெளியிடச் செய்து மாநிலத்தின் சட்டப்பூர்வ உரிமைகளை நிலைநாட்டிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் முயற்சிகள் மகத்தானவையாகும்.
காவேரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பைத் திறம்படச் செயல்படுத்தும் வகையில், காவேரி மேலாண்மை வாரியத்தையும், காவேரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவையும் தாமதமின்றி அமைக்க வேண்டுமென இந்த அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துகிறது.
நதிநீர் இணைப்பு
நதிநீர் இணைப்பின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தீபகற்ப நதிகளை இணைக்கும் திட்டத்தை, குறிப்பாக, மகாநதி-கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணார்-பாலாறுகாவேரி-வைகை மற்றும் குண்டாறு இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு விரைவில் செயல்படுத்த வேண்டுமென்ற தொடர் கோரிக்கையை இந்த அரசு மீண்டும் வலியுறுத்துகிறது.
தேசியமயமாக்க வேண்டும்
தேசிய நீர் மேம்பாட்டு முகமையால் ஏற்கனவே சாத்தியக்கூறு ஆய்வுகள் முடிக்கப்பட்டுள்ள பம்பா-அச்சன்கோவில்-வைப்பாறு திட்டத்தை விரைவுபடுத்த வேண்டுமெனவும் இந்த அரசு கேட்டுக்கொள்கிறது. நாட்டின் நீர்வளத்தை உகந்த முறையில் பயன்படுத்திட மாநிலங்களுக்கிடையே பாயும் அனைத்து நதிகளும் முன்னுரிமை அடிப்படையில் தேசியமயமாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு ஆளுநர் ரோசய்யா வலியுறுத்தியுள்ளார்.