சென்னை: ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் ரயில்வே போலீஸ் பலி
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் போலீஸ் கால் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் செங்கல்பட்டை சேர்ந்த ரதிதேவி(வயது 35) ஆவார். இவர் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் காவல் பணியில் ஈடுபட்டு வந்தார். செவ்வாய்கிழமையன்று இரவு 8 மணிக்கு பணி முடிந்து மின்சார ரயில் மூலம் எழும்பூர் ரயில் நிலையம் வந்தார். வேகமாக வீடு செல்ல வேண்டும் என்ற ஆவலில் அப்போது புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர் ஏற முயன்றார். அப்போது கால் தடுமாறி ரயிலுக்கு அடியில் விழுந்தார். விழுந்த வேகத்தில் அவர் மீது எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த சம்பவத்தை நேரில் பார்த்த பிற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ரதிதேவியின் உடலை மீட்டு சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஓடும் ரயிலில் ஏறும் போது விபத்தில் சிக்கி ரயில்வே போலீஸ் உயிரிழந்த சம்பவம் எழும்பூர் ரயில் நிலையத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications