சென்னை விமான நிலையத்தில் ரூ. 1.34 கோடி புதிய 2000 நோட்டுக்கள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் 1.34 கோடி மதிப்புள்ள புதிய 2 ஆயிரம் நோட்டுக்களை பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: ஒரே ஒரு 2000 ரூபாய் நோட்டை கண்ணில் பார்க்க சாமான்ய மக்கள் மணிக்கணக்கில் வங்கி வாசலில் காத்திருக்கின்றனர். ஆனால் ஊழல்வாதிகளும், அரசியல்வாதிகளும், பணக்காரர்களும், பழைய ரூபாய் நோட்டுக்களையும், கறுப்பு பணத்தையும் கோடிக்கணக்கில் மாற்றி வெள்ளையாக்கி வருகின்றனர். கறுப்பு பணத்தை வெள்ளையாக்கியவர்களை வருமான வரித்துறையினர் பொறி வைத்து பிடித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் கட்டுக் கட்டாக கொண்டுவரப்பட்ட புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் கடத்தப்படுவதாக மத்திய வருபாய் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டபோது, ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் சிக்கியது. இதனையடுத்து அவற்றை கொண்டு வந்த 5 பேரை பிடித்த மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு புதிய ரூபாய் தாள்கள் கோடிக்கணக்கில் பிடிபடும் நிலையில், தற்போது விமான நிலையத்தில் பிடிபட்டுள்ள பணம் யாருடையது என்று விசாரணை நடந்து வருகிறது. அரசியல் வாதிகளுக்காக பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி எடுத்து வரப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications