மருத்துவ மேல் படிப்பு: தனியாரிடமிருந்து இடஒதுக்கீட்டை பெறாத தமிழக அரசுக்கு ரூ.1 கோடி அபராதம்!
தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து அரசு இடஒதுக்கீட்டை கேட்டு பெறாததற்கு கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு ரூ.1. கோடி அபராதம் விதித்தது.
சென்னை: தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து அரசு இடஒதுக்கீட்டை கேட்டு பெறாததற்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு ரூ.1. கோடி அபராதம் விதித்துள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் ரூ. 1 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிக்கு தமிழக அரசின் ரூ.1 கோடி அபராதத்தை பயன்படுத்திக் கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு இடஒதுக்கீட்டுக்கு இடம் ஒதுக்காததால் தகுதி உள்ளவர்கள் எம்.டி., எம்.எஸ். சேர முடியவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நாமக்கல் டாக்டர் காமராஜ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கானது நீதிபதி கிருபாகரன் தலைமையில் விசாரிக்கப்பட்டு வந்தது. இன்று தீர்ப்பளித்த நீதிபதி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அரசு இடஒதுக்கீட்டை கேட்டு பெறாமல் தமிழக அரசு மெத்தனம் காட்டியதால் தகுதி உள்ளோர் எம்.டி., எம்.எஸ். சேர முடியவில்லை.
கல்லூரிகளும், தமிழக அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் விதிகளை பின்பற்றவில்லை. மேலும் அரசு ஒதுக்கீட்டு இடங்களை ஒப்படைக்காத கல்லூரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் இத்தகைய மெத்தனப் போக்கால் தமிழக அரசுக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது. அதேபோல் இட ஒதுக்கீடு தொடர்பாக விதிகளை மீறிய தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்காத இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிக்கு தமிழக அரசின் ரூ.1 கோடி அபராதத்தை பயன்படுத்திக் கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.