வெட்டி வீழ்த்தப்படுமா அத்தனை சீமைக் கருவேல மரங்களும்..?
மதுரை: தமிழகத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் அத்தனையையும் வெட்டி வீழ்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற பெஞ்ச் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
நீண்ட காலமாக இதுதொடர்பாக பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அதுகுறித்து பெரிதாக அக்கறை காட்டியதில்லை எந்த அரசும். அது திமுக அரசாக இருந்தாலும் சரி, அதிமுக அரசாக இருந்தாலும் யாருமே இதைக் கண்டுகொண்டதில்லை என்பதே இதுவரை நிலையாக இருந்தது. தற்போது இதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ட் முடிவு கட்டியுள்ளது.
தமிழகத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும், வெட்டி வீழ்த்த வேண்டும். இந்தப் பணியை தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் சேர்த்து இதைச் செய்யலாம் என்றும் உயர்நீதிமன்ற பெஞ்ச் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
3 மாத கால அவகாசம் தமிழக அரசுக்குத் தரப்பட்டுள்ளது. அதற்குள் இதைச் செய்யுமாறும், செய்து முடித்து விட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அது தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

வைகோ போட்ட வழக்கு
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் இதுதொடர்பாக வழக்குத் தொடர்ந்திருந்தனர். அதில், கருவேலம் மரங்களால் மாநிலத்தின் நிலத்தடி நீர் சுரண்டப்படுகிறது. விவசாயிகளுக்கு மிகப் பெரிய எமனாக இந்த கருவேலம் மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. இதை ஒழிக்க வேண்டும். இதைச் செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.

நீதிபதிகள் அதிரடி உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர். சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க தற்போது உத்தரவிட்டுள்ளது. மேலும் வைகோ கூறியுள்ள யோசனைகளையும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

டெங்கு மலேரியா போல மோசமானது
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறுகையில், டெங்கு, மலேரியா ஒழிப்பில் எப்படி அரசு தீவிரம் காட்டுகிறதோ அதே அக்கறையை, தீவிரத்தை கருவேல மர ஒழிப்பிலும் தமிழக அரசு காட்ட வேண்டும் என்றனர்.

எப்படி வந்தன இந்த மரங்கள்?
கருவேல மரங்கள் நமது மரங்களே கிடையாது. 60களில் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து இவை இங்கு இறக்குமதி செய்யப்பட்டன. அப்போது ராமநாதபுரத்தில், வறட்சி நிலவியதால் தண்ணீரே இல்லாமல் வளரும் இந்த மரங்களைப் பயன்படுத்தி விறகு, கட்டை போன்றவற்றை உற்பத்தி செய்யலாம் என்ற எண்ணத்தில் கொண்டு வந்தனர்.

காட்டுத் தீயாக பரவி
ஆனால் இந்த மரங்களின் விதைகள் அப்படியே பரவி தமிழக் முழுவதும் பரவி இன்று காட்டுத் தீ போல மாநிலம் முழுவதும் பரவி வளர்ந்து கிடக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் வறண்டு போக இந்த கருவேலம் மரங்களும் ஒரு காரணம் என்கிறார்கள். காரணம் இந்த செடியானது நிலத்தடி நீரை மட்டுமல்லாமல், காற்றில் உள்ள ஈரப் பதத்தையும் சேர்த்து உறிஞ்சி காலி செய்து விடும் அபாயகரமான செடியாகும்.

நீ்ர் நிலைகள் காலி
இன்றும் கூட கிராமப்புறங்களில் நீர் நிலைகளுக்கு அருகில் இந்த மரங்கள் அதிக அளவில் நின்று கொண்டுள்ளன. இதன் காரணமாக அந்த நீர்நிலைகள் வற்றி வறண்டு போகும் நிலை ஏற்படுகிறது.

பறவைகள் கூட வராது
இந்த மரங்களிலிருந்து ஆக்சிஜன் வெளிப்படுவதும் கூட மிக மிக குறைவாகும். தண்ணீரையும் இது விடாமல் உறிஞ்சி விடும். இதன் காரணமாக பறவைகள் கூட இங்கு வந்த கூடு கட்டாது, தங்கிச் செல்லாது.

அரக்கன்
நிலத்தடி நீரை முழுமையாக உறிஞ்சி விடும் இந்த செடியானது, அது கிடைக்காவிட்டால், காற்றில் உள்ள ஈரப் பதத்தை உறிஞ்ச ஆரம்பித்து விடும். மேலும் நீரையும் இது விஷமாக்கும் தன்மை கொண்டது. இந்த செடிலிருந்து ஆக்சிஜனை விட கார்பன் டை ஆக்சைடுதான் அதிக அளவில் வெளியாகும் என்பதால் இது விஷச் செடியாகும்.

எங்கு அதிகம்?
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில்தான் அதிக அளவில் கருவேல மரங்கள் உள்ளன. இவற்றை மொத்தமாக வெட்டி வீழ்த்த ரூ. 1500 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வெட்டி வீழ்த்த வேண்டும்
எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, இவற்றை வெட்டி வீழ்த்த வேண்டியது நமது சமூகக் கடமையாகும். அரசுதான் வெட்ட வேண்டும் என்று இல்லை. தனி நபர்களும் கூட குழுவாக சேர்ந்து இதைச் செய்ய முன்வர வேண்டும்.












Click it and Unblock the Notifications