திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி பணத்தை எண்ணும் பணி நிறைவு
கோவை: திருப்பூரில் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி பணத்தை எண்ணும் பணி நிறைவு பெற்றதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 13-ம் தேதி திருப்பூர் செங்கப்பள்ளி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், 3 கண்டெய்னர் லாரிகளில் 570 கோடி ரூபாய் பணம் சிக்கியது. பறிமுதல் செய்யப்பட்ட கண்டெய்னர்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

அங்கு கண்டெய்னர்களுக்கு துணை ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்த பணம் ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு அளிக்க எடுத்துச் செல்லப்பட்டது என்று அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், கோவை பாரத ஸ்டேட் வங்கி காப்பகத்திலிருந்து, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கிளைக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்பட்டது.
இருப்பினும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே பணம் ஒப்படைக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. பின்னர் இந்த பணத்தை எண்ணி சரி பார்க்க வருமான வரித்துறைக்கு தேர்தல் ஆணையம் அனுமதியளித்தது.
இதனையடுத்து, இன்று அதிகாலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து 3 கண்டெய்னர் லாரிகளும் பலத்த பாதுகாப்புடன் கோவை ஸ்டேட் வங்கி நிறுவன காப்பக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பணப் பெட்டிகள் இறக்கப்பட்டு வங்கியின் பணக் காப்பகத்தில் வைக்கப்பட்டது.
பணத்தை எண்ணும் பணி முற்பகல் 11 மணிக்கு தொடங்கி மாலை வரை நீடித்தது. சுமார் ஆறரை மணி நேரம் நடந்த இந்த பணியில், வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டனர். இது தொடர்பான வருமான வரித்துறை அறிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு அளித்தபிறகு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications