ஐ.ஐ.டி.க்கு எதிராக 4வது நாளாக போராட்டம்- சென்னையில் ம.க.இ.க. மறியலால் பதற்றம்- போலீசுடன் மோதல்!!
சென்னை: அம்பேத்கர்- பெரியார் பெயரிலான மாணவர் வாசகர் வட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னை ஐ.ஐ.டி. முன்பாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் இன்று நடத்திய சாலை மறியல் போராட்டத்தின் போது போலீசாருடன் மோதல் ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் என்ற மாணவர் அமைப்பு பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்ததாக கூறி அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் பல்வேறு இடங்களில் மாணவர் மற்றும் மனித உரிமை அமைப்புகள் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றன.
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந் நிலையில் இன்று 4வது நாளும் இப்போராட்டம் நீடித்தது.

சென்னை ஐ.ஐ.டி.டி எதிரே மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பினர் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அம்பேத்கர்- பெரியார் வாசகர் வட்ட தடையை நீக்கக் கோரி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
பின்னர் போக்குவரத்தை தடுத்து நிறுத்தி மறியலில் அவர்கள் அமர்ந்தனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ய முயற்சித்தனர். இதனால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளுவில் சில பத்திரிகையாளர்களும் சிக்கிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இப்போராட்டத்தினால் போக்குவரத்துக்கு மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

ஐ.ஐ.டிக்குள் போராட்டம்..
அதே நேரத்தில் ஐ.ஐ.டி. வளாகத்துக்குள் அம்பேத்கர்- பெரியார் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது அமைப்பின் மீதான தடையை நீக்கக் கோரி போராட்டம் நடத்தினர். அத்துடன் பிற மாணவர் வாசகர் வட்டத்தினருக்கான வசதிகளைப் போல தங்களுக்கும் செய்து தர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications