சென்னை: புதிய ஆட்டோ கட்டணத்தை அமல்படுத்தாத 2 ஆயிரம் ஆட்டோக்கள் பறிமுதல்
சென்னை: சென்னை மாநகரில் புதிய ஆட்டோ கட்டணத்தை அமல்படுத்தாததுடன், அரசு உத்தரவையும் மீறி இயக்கிய 2 ஆயிரம் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை மாநகரம் முழுவதும் சுமார் 72,000 ஆட்டோக்கள் ஓடுகின்றன. இந்த ஆட்டோகளுக்கு தமிழக அரசு புதிய கட்டணத்தை நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 25ந் தேதி முதல் புதிய கட்டணம் நடைமுறைக்கு வந்தது. இதன்படி குறைந்தபட்ச கட்டணம் ரூ.25யும், அதற்கு மேல் ஒவ்வொரு கிலோமீட்டருக்கு ரூ.12 நிர்ணயிக்கப்பட்டது. புதிய கட்டணங்கள் அடங்கிய பட்டியலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் வட்டார போக்குவரத்து சார்பில் வழங்கப்பட்டது.

ஆட்டோக்களில் மீட்டர் வைத்து கொண்டு மீட்டர் போடாமல் ஓட்டுவது, புதிய கட்டண அட்டையை பயணிகள் பார்வையில் வைக்காமல் மறைத்து வைத்திருப்பது, பழைய முறையில் கட்டணம் வசூலிப்பது, பயணிகள் அழைக்கும் இடத்திற்கு வரமறுப்பது, மீட்டரில் தில்லு முல்லு போன்றவை இருந்தால் புகார் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஆட்டோக்களின் பதிவு எண்ணுடன் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும், புகார் தெரிவிக்க அறிவிக்கப்பட்டிருந்த தொலைபேசி எண்களான 044-267 44445, 044- 247 49002 ஆகிய எண்களிலும் நூற்றுக்கணக்கான புகார்கள் பெறப்பட்டன.
இதுதவிர சென்னையில் அயனாவரத்தில் உள்ள இணை போக்குவரத்து ஆணையர் (வடக்கு) மற்றும் அசோக்நகரில் உள்ள இணை போக்குவரத்து ஆணையர் (தெற்கு) ஆகிய அலுவலகங்களிலும் புகார் தெரிவிக்கப்பட்டன. அரசு அறிவித்த புதிய கட்டண அட்டைப்படி ஆட்டோக்களில் மீட்டர் திருத்தம் செய்ய போதிய காலஅவகாசத்தை அரசு வழங்கியது.
இதனை பொருட்படுத்தாமல் சிலர் ஆட்டோக்களில் மீட்டரில் திருத்தம் செய்யாததுடன், பழைய வாடகை முறையை கேட்டு பயணிகளை துன்புறுத்தி உள்ளனர்.
அதன்படி சென்னையில் போக்குவரத்துறை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் 2 ஆயிரம் ஆட்டோக்கள் சிறைபிடிக்கப்பட்டு, ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அத்துடன் ஆட்டோ டிரைவர்களின் ஓட்டுனர் உரிமமும் பறிமுதல் செய்யப்படுவதுடன், தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது. முழுமையாக அரசு உத்தரவை நடைமுறைப்படுத்தும் வரை நடவடிக்கை தொடரும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications