பழனி முருகன் கோவிலில் 16 நாளில் ரூ. 1.07 கோடி காணிக்கை
பழனி: பழனி முருகன் கோவிலில் கடந்த 16 நாட்களில் மட்டும் உண்டியல்கள் மூலம் ரூ.1 கோடியே 7 லட்சம் காணிக்கையாக கிடைத்துள்ளது.
பழனி முருகன் கோவிலில் கடந்த 16 நாட்களில் பக்தர்கள் உண்டியல்களில் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி, கோவில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம் முன்னிலை மலைக்கோவில் வளாகத்தில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் நடைபெற்றது.
திண்டுக்கல் அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் உமா ஆகியோர் காணிக்கை எண்ணும் பணிகளை கண்காணித்தனர். உண்டியல் எண்ணிக்கையில் பல்வேறு வங்கி கிளைகளின் அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களோடு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள், அலுவலர்கள் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பங்கேற்றனர்.
அதில், உண்டியல்கள் மூலம் ரூ.1 கோடியே 7 லட்சத்து 75 ஆயிரத்து 965 இருப்பதாக கணக்கிடப்பட்டது. அத்துடன் தங்கத்தாலிகள் உள்பட 819 கிராம் தங்கம், மற்றும் 10 ஆயிரத்து 100 கிராம் வெள்ளி பொருட்களையும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
மேலும் உண்டியலில் 365 வெளிநாட்டு கரன்சிகளும் இருந்தன.
இதன் தொடர்ச்சியாக, பழனி முருகன் கோவிலின் உபகோவில்களான திரு ஆவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், பெரியாவுடையார் கோவில் உள்ளிட்ட கோவில்களில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி மலைக்கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications