பழைய கிரானைட் மலை போட்டோ இருக்கா... இருந்தா கொடுங்க... கேட்கிறார் சகாயம்!
மதுரை: கிரானைட் கற்களை வெட்டியதால் அழிக்கப் பட்டுள்ள மதுரை புராதன மலைகளின் பழைய போட்டோக்களை வைத்திருப்பவர்கள் சாட்சியத்திற்காக அதனை விசாரணைக் குழுவிடம் சமர்ப்பிக்கலாம் என சகாயம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் கிரானைட் முறைகேட்டால் புராதன மலைகள் அழிக்கப் பட்டுள்ளன. சர்க்கரை பீர்மலை பாதியாக வெட்டப்பட்ட நிலையில் உள்ளது. பஞ்ச பாண்டவர் மற்றும் புறாக்கூடு மலைகளும் இதே நிலையில் தான் காணப்படுகின்றன. கீழையூர், கீழவளவு மலைகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட அடி வரை தோண்டப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சகாயம் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகின்றது. இதற்கு அழிக்கப்பட்டுள்ள மலைகளின் பழைய போட்டோக்கள் தேவைப்படுகின்றன. எனவே, இந்த மலைகளின் பழைய போட்டோக்களை வைத்திருப்போர், அவற்றை விசாரணை குழுவிடம் சமர்ப்பிக்கலாம் என சகாயம் அறிவித்துள்ளார்.
இதன்படி, பழைய மலைகளின் புகைப்படங்களைத் தருபவர்களின் பெயர், முகவரி உள்ளிட்டவை ரகசியமாக வைக்கப் படும் என விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.