நாளை தொடங்குகிறது சகாயம் விசாரணை... மதுரையில்!
மதுரை: மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் மோசடி தொடர்பான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணை அதிகாரியான சகாயம் நாளை தொடங்குகிறார். இதற்காக அவர் இன்று இரவு சென்னையிலிருந்து ரயில் மூலம் மதுரைக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
மதுரை மாவட்டம் மேலூர், கீழவளவு, இ.மலம்பட்டி, கீழையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள 86 கிரானைட் குவாரிகளில் சுமார் ரூ.16 ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான செய்தி முதலில் தினபூமி நாளிதழில் வெளி வந்தது. இதையடுத்து இந்த முறைகேடு தொடர்பாக, அப்போது மதுரை கலெக்டராக இருந்த சகாயம் அறிக்கை ஒன்றை மாநில அரசிடம் சமர்ப்பித்தார்.

மேலும், இந்த குவாரிகளில் கனிமவள விதியை மீறி 39 லட்சத்து 30 ஆயிரத்து 431 கன மீட்டர் அளவுக்கு கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதும் தெரியவந்தது. இந்த முறைகேடுகள் குறித்த புகாரை தொடர்ந்து பி.ஆர்.பி.கிரானைட் உரிமையாளர் பழனிச்சாமி உள்பட பலர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த முறைகேடு தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் கலெக்டரான சகாயத்திற்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. அதற்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. சகாயம் விசாரணை நடத்துவார் என்றும் அதிரடியாக உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தனக்கு, கனிம வளத்துறையை சேர்ந்த 2 உதவி இயக்குநர்கள், 2 புவியியல் ஆய்வாளர்கள், 2 தாசில்தார்கள் உள்பட 14 பேரை விசாரணைக்கு உதவியாக நியமிக்க வேண்டும் என சகாயம் கேட்டுக் கொண்டார். இதற்கு உயர்நீதிமன்றம் சம்மதம் தெரிவித்து 14 பேரை நியமித்து உத்தரவிட்டது.
ஆனால் இந்த 14 பேரை விசாரணைக்கு அழைப்பதில் சகாயம் பல சிக்கல்களைச் சந்தித்தார். யாரும் சகாயத்துடன் இணைந்து விசாரணையில் ஈடுபடத் தயாராக இல்லை என்று தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், சகாயம் குழுவினர் விசாரணை நடத்துவதற்கு வசதியாக மதுரை பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் அலுவலகம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்தபடி சகாயம் தனது விசாரணையைத் தொடங்கவுள்ளார்.
நாளை முதல் தனது விசாரணை தொடங்கவுள்ளதாக சகாயம் கூறியுள்ளார். இதற்காக அவர் இன்று இரவு அவர் சென்னையிலிருந்து ரயில் மூலம் மதுரைக்குப் புறப்பட்டு வருகிறார். நாளை மதுரை வந்து சேர்ந்ததும் தனது பணியை அவர் தொடங்கவுள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மதுரையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆவணங்கள் ஒப்படைப்பு:
இதற்கிடையே, மதுரை கிரானைட் முறைகேடு புகாரில், விசாரணை தொடர்பான ஆவணங்கள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் ஆறுமுக நயினார், சென்னையிலுள்ள சகாயத்திடம் இந்த ஆவணங்களை நேரில் வழங்கினார்.
சகாயத்துடன் அறிவியல்பூர்வமாக விசாரணை மேற்கொள்ள இரண்டு நிபுணர்களும் மதுரை செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications