For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை கிரானைட் குவாரிகளில் மனநோயாளிகள் உட்பட பலர் நரபலி!-வெளிவரும் பகீர் உண்மைகள்!!

Google Oneindia Tamil News

மதுரை: கிரானைட் குவாரிகளில் மனநோயாளிகள் உட்பட பலர் நரபலி கொடுக்கப் பட்டுள்ளதாக பிஆர்பி குவாரியில் டிரைவராக பணியாற்றியவர் விசாரணை அதிகாரி சகாயத்திடம் புகார் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட கிரானைட் குவாரிகளில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக சகாயம் தலைமையிலான விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் மதுரையில் முதல்கட்ட விசாரணையைத் துவக்கினார் சகாயம். அப்போது, கிரானைட் குவாரிகளால் விவசாயம் அழிக்கப் பட்டு, வாழ்வாதாரத்தை இழந்ததாக விவசாயிகள் கண்ணீர் மல்க புகார் மனு அளித்தனர்.

முதல்கட்ட விசாரணைக்குப் பின் சென்னை திரும்பிய சகாயம், நேற்று மீண்டும் மதுரை சென்று இரண்டாம் கட்ட விசாரணையை தொடங்கினார்.

Sagayam panel begins second round of probe into illegal granite quarrying in Madurai

நரபலி:

அப்போது பிஆர்பி குவாரியில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த கீழவளவு அருகே கம்பர்மலைப் பட்டி செவற்கொடியோன் என்பவர் புகார் மனு அளிக்க வந்தார். தனது புகாரில் அவர், ‘பிஆர்பி குவாரியில் 5 ஆண்டுகளாக ஓட்டுநராக பணியாற்றினேன். ஒடிசா, பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்து வேலைக்கு வந்த தலித் சமூகத்தினரை மூட நம்பிக்கையின் அடிப்படையில் நரபலி கொடுத்தனர். இதற்கு தொழிலாளர்களை அழைத்துவரும் ஏஜெண்டுகள் உடந்தையாக செயல்பட்டனர். விபத்தில் இறந்து விட்டதாகக் கூறி உடலை கொடுத்தனுப்பினர். இதில் பிரச்சினைகள் ஏற்பட்டதால், சாலைகளில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப் பட்டவர்களை சாப்பாடு கொடுத்து அழைத்து வருவர்.

புதிய கிரேன், பொக்லைன், குவாரிகள் செயல்படும்போது கேரளத்திலிருந்து மந்திரவாதிகளை அழைத்துவந்து மனநலம் பாதித் தவர்களை நரபலி கொடுப்பர். நான் புதுக்கோட்டை பிஆர்பி குவாரியிலிருந்து வரும்போது மேலாளர் அய்யப்பன் என்பவர் மனநலம் பாதித்த 2 பேரை நான் ஓட்டிவந்த காரில் ஏற்றிவந்து நரபலி கொடுத்தார்.

கரூர் மாவட்டம் தோகைமலையில் இருந்து அனுமந்தன் என்பவர் மனநலம் பாதித்த 2 பேரை நான் ஓட்டிவந்த ஜீப்பில் ஏற்றி வந்து நரபலி கொடுத்தனர். அடுத்த 2 நாளில் தூத்துக்குடியிலிருந்து மனநலம் பாதித்த ஒருவரை அனுமந்தன் அழைத்துவந்தார். அவரும் நரபலி கொடுக்கப்பட்டார். மற்றொரு மேலாளர் ஜோதிபாசு புதுக்கோட்டை பகுதியிலிருந்து ஒரு மனநலம் பாதித்தவரை அழைத்துவந்து அன்னவாசல் குவாரியில் இருந்த முருகேசனிடம் காண்பித்தார். இந்த விஷயம் வெளியே தெரிந்தால், உனக்கும் இதே நிலைமைதான் எனக்கூறி என்னை மிரட்டினார். கீழவளவு கல்லுதின்னி சேகர் என்பவர் மனநலம் பாதித்த ஒருவரை அழைத்து வந்து ஜோதிபாசுவிடம் ஒப்படைத்தார். இப்படி பலர் நரபலி கொடுக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து நீர்வள பாதுகாப்பு மற்றும் ஊழல் இயக்கம் சார்பில் உலக மனித உரிமை பாதுகாப்பு மையத்துக்கும், குடியரசுத் தலைவர், பிரதமருக்கு புகார் அனுப்பியுள்ளோம். பொதுநலன் கருதி இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

தனது புகார் மனு தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சேவற்கொடியோன், ‘நரபலி குறித்து காவல் துறையினர் கேட்டாலும் தகவல் அளிக்க தயாராக உள்ளேன்' என்றார்.

இதேபோல், மேலூர் அருகே சோமநாதபுரத்தை சேர்ந்த பாண்டிச்செல்வி என்பவர் கொடுத்த புகாரில், ‘பிஆர்பி நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றிய தனது கணவர் கருப்பசாமி, 7 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென இறந்துவிட்டதாக தெரிவிக்கப் பட்டதாகவும், ஆனால், அவரது உடலைக்கூட பார்க்க விடவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இதனால், தனது கணவர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவர் தனது புகார் மனுவில் கூறியிருந்தார்.

புதுதாமரைப்பட்டியை சேர்ந்த ரவி கொடுத்த புகாரில், ‘குவாரி யில் சிறுமி ஒருவர் நரபலி கொடுக் கப்பட்டார். இதில் அதிகாரிகள் தூண்டுதலில் என்மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். வழக்கு பதிந்து 6 ஆண்டுகளாகியும் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. உண்மையான குற்றவாளி யார் என்றும், நரபலி கொடுத்தது ஏன் எனவும் கண்டுபிடிக்க சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார்.

நேற்றைய விசாரணையில், குவாரிகளில் நரபலி கொடுக்கப்பட்டதாக புகார்கள் வந்ததால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பலர் நிலத்தை மிரட்டி வாங்கியதாவும், பேசியபடி பணம் வழங்கவில்லை என்றும் புகார்களை அளித்தனர்.

சகாயம் ஆதரவு கமிட்டி தலைவர் சோமசுந்தரம் அளித்த புகாரில், ‘குவாரி முறைகேட்டுக்கு உடந்தை யாக இருந்த அதிகாரிகள், புரோக்கர்கள், வெளிநாட்டு நிறுவனங்கள், பினாமிகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

இதேபோல், மதுரை நகரில் பணியாற்றும் எஸ்ஐ.க்கள் சாந்தி, விஜயாள், மைக்கேல் ஜெரால்டு, தலைமைக் காவலர் நிர்மலா உட்பட 5 பேர் மனு அளித்தனர். அதில், 2001ம் ஆண்டு தாங்கள் வாங்கிய வீட்டுமனையில், கிரானைட் குவியல் கொட்டப்பட்டுள்ளதாகவும், நிலத்தை மீட்டுத் தரும்படியும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ஆர்டிஓ செந்தில்குமாரி, பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆவணங்கள் தாக்கல் செய்தனர். புகார் மனுக்களைப் பெற்றுக் கொண்ட சகாயம், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். இன்றும் மனுக்கள் பெறப்படுகின்றன.

English summary
The Madras high court-appointed U Sagayam panel has started the second round of investigations into the multi-crore illegal granite quarrying in Madurai district on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X