கிரானைட் முறைகேடு: இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சகாயத்திற்கு 6 வாரம் கூடுதல் அவகாசம்
மதுரை: மதுரையில் கிரானைட் குவாரிகளில் முறைகேடு நடந்தது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு மேலும் 6 வாரம் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்படும் கனிம வளங்கள் குறித்து விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைக்க வேண்டும். அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக சேவகர் டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரித்து, மதுரையில் உள்ள கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்து, மார்ச் 12ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தரப்பில் முதல் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பிறகு, முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. அதற்கு இரண்டு மாதம் அவகாசம் கூடுதலாக வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை தலைமை நீதிபதி கவுல், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தரப்பில் வக்கீல் வி.சுரேஷ் ஆஜராகி, மேலும் அவகாசம் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: முறைகேடு தொடர்பான கேள்வித் தொகுப்புகளுக்கு பதில் அளிக்குமாறு பல்வேறு துறைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், தற்போது வரை 20க்கும் மேற்பட்ட துறைகளே முறையாக பதில் அளித்துள்ளன. மீதமுள்ள துறைகளில் சில துறைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பே தங்களது பதில்களை தெரிவித்துள்ளன.
இதில், மதுரை எஸ்.பி.கடந்த மாதம் 16ம் தேதி தனது அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கை பல ஆயிரம் பக்கங்களைக் கொண்டதாக உள்ளது. அதை படிப்பதற்கே அவகாசம் தேவைப்படுகிறது.மதுரை மாநகர போலீஸ் ஆணையர், மண்ணியல், சுரங்கத் துறை, வருமான வரித் துறை ஆகியவை தங்களது அறிக்கைகளை இதுவரை தாக்கல் செய்யவில்லை. இந்தத் துறைகளிலிருந்து சில முக்கியமான தகவல் இதுவரை பெறப்படவில்லை. அதனால், மேலே கூறப்பட்ட இந்தத் துறைகள் உடனடியாக தங்களது அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.
அதன் பிறகு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மேலும் கூடுதலாக 4 வார காலம் அவகாசம் அளிக்க வேண்டும். மேலும், பணிகள் தொடர்ந்து நடைபெற கூடுதலாக ரூ.2 லட்சத்தை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அறிக்கை தாக்கல் செய்யாத துறைகள் இரண்டு வாரங்களுக்குள் தங்களது அறிக்கையை ஆய்வுக் குழு முன்பு தாக்கல் செய்ய வேண்டும்.
சிறப்பு அதிகாரி கோரிய ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். சிறப்பு அதிகாரி கோரிக்கையின்படி அறிக்கை தாக்கல் செய்ய 6 வாரம் காலம் அவகாசம் வழங்கி, ஜூலை 23ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications