சேலம் விபத்தில் இறந்த மென்பொறியாளர் – குடும்பத்தினருக்கு ரூ.49 லட்சம் நஷ்ட ஈடு!
சேலம்: சேலத்தில் விபத்தில் இறந்த மென்பொறியாளரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 49 லட்சம் நஷ்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் கே.சண்முகம் பிரகாஷ். இவர் பெங்களூரில் உள்ள தனியார் கம்பெனியில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு ஒரு வயதில் லட்சன் என்ற மகன் உள்ளான்.
புறவழிச்சாலையில் விபத்து:
கடந்த 2013 ஆம் ஆண்டு பெங்களூரில் இருந்து சண்முகம் பிரகாஷ் காரில் தனது நண்பர்களுடன் பள்ளிப்பாளையம் வந்தார். இவர் சேலம் அருகே உள்ள தர்மபுரி புறவழிச்சாலை பக்கம் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த லாரியும், காரும் மோதிக்கொண்டது.
நஷ்ட ஈடு கேட்டு வழக்கு:
இதில் சண்முகம் பிரகாஷ் படுகாயம் அடைந்து இறந்து விட்டார். இந்த விபத்து குறித்து சண்முகம்பிரகாசின் குடும்பத்தினர் வக்கீல்கள் ஏ.நசீர்அகமத், கேசிவதுரை ஆகியோர் மூலம் சேலம் மோட்டார் வாகன சிறப்பு நீதிமன்றத்தில் ரூபாய் ஒன்றரை கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.
49 லட்சம் நஷ்ட ஈடு:
பின்னர் இந்த வழக்கு சேலம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவிற்கு மாற்றப்பட்டது. இதை ஓய்வு பெற்ற நீதிபதி வேணுகோபால், உறுப்பினர்கள் எஸ்.டி.மணிவாசகம், ரூபி தியாகரான், செயலாளர் கே.மணி ஆகியோர் விசாரித்து இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் ரூபாய் 49 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
காசோலைகள் வழங்குதல்:
இதில் இறந்த சண்முகம் பிரகாசின் மனைவி பானுமதிக்கு ரூபாய் 19 லட்சமும், குழந்தைக்கு ரூபாய் 15 லட்சமும், சண்முகம் பிரகாசின் தாயார் மனோகரிக்கு ரூபாய் 10 லட்சமும், தந்தை கிருஷ்ணனுக்கு ரூபாய் 5 லட்சமும் வழங்கவும் உத்தரவிட்டனர். இந்த காசோலைகள் இன்று காலை வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications