வீட்டு வேலைக்கு இளம்பெண்களை அழைத்து வந்து விபச்சாரம் - சேலத்தில் விபச்சார கும்பல் கைது
சேலம்: சேலத்தில் வீட்டு வேலைக்காக அழைத்து வந்து இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளிய கும்பல் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன் தினம் இரவு சேலம் போலீசாருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் ஒரு பெண் மிகவும் பதட்டத்துடன் பேசினார். "சார் நான் ஊட்டியில் இருந்து பேசுகிறேன், என் பெயர் ஜெனிட்டா, நான் ஊட்டியில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறேன்.
சேலத்தில் ஒருவர் இளம்பெண்ணை வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்று அவளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள். எப்படியாவது அந்த பெண்ணை காப்பாற்றுங்கள் சார்" என்று கூறி சம்பந்தப்பட்டவரின் முகவரியையும் தெரிவித்தார்.
இதனால் பதறிப்போன போலீசார் உடனே நடவடிக்கையில் இறங்கினார்கள். ஜெனிட்டா சொன்ன முகவரியை வைத்துக் கொண்டு இரவோடு இரவாக போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது டவுன் ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் சேலம் முள்ளுவாடி கேட் மக்கான் தெருவைச் சேர்ந்த சலீம் என்கிற ஜனவுல்லா என்பவர் இளம்பெண்ணை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சலீம், விடுதி மேலாளர் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த சந்திரசேகர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த அம்மாப்பேட்டை நஞ்சம்பட்டியை சேர்ந்த கவுசல்யா என்ற இளம் பெண்ணையும் மீட்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கவுசல்யாவை வீட்டு வேலைக்காக அழைத்து வந்து அவளை விபசாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது. போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்தபோது தன்னைப்போல் தனது தோழியும் விபசாரத்தில் தள்ளப்பட்டுள்ளாள் என்ற அதிர்ச்சி தகவலையும் கூறினாள்.
"நானும் பொன்னம்மா பேட்டை பாண்டியன் தெருவைச் சேர்ந்த புவனேஸ்வரி என்பவளும் பள்ளியில் ஒன்றாக படித்தோம். இருவரும் இணைபிரியாத தோழியாக இருந்தோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு என்னைப்போலவே அவளை தாதகாப்பட்டி அம்பாள்ஏரி 2 ஆவது குறுக்குத் தெருவில் வசித்து வரும் பாலசுப்பிரமணி என்பவர் வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்று தப்பான வழியில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வராஜன் தலைமையில் போலீசார் பாலசுப்பிரமணி வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து புவனேஸ்வரியை மீட்டனர். அவளையும் விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக பாலசுப்பிரமணி மற்றும் இந்த தொழிலுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி செல்வியையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட கவுசல்யா, புவனேஸ்வரி ஆகிய 2 பேரும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications