ஆவின் கலப்பட வரிசையில் அடுத்த மோசடி – சோம்பு, சீரகத்தில் குச்சி கலந்த குஜராத் வியாபாரி கைது
சேலம்: சேலத்தில் கிட்டதட்ட 500 மூட்டைகளில் உணவுப்பொருட்களான மிளகு, சீரகம், கசகசா, சோம்பு வெந்தயத்தில் கலப்படம் செய்த குஜராத் வியாபாரியின் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
சேலம் நகரிலுள்ள செவ்வாய்பேட்டை சந்தை தமிழகத்தில் உள்ள முக்கியமான சந்தைகளுள் ஓன்று.

வட இந்தியாவை சேர்ந்த பலர் இங்கு தானியங்கள் மொத்த விற்பனை செய்து வருகிறார்கள். பலமாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் இங்குள்ள மொத்த விற்பனையாளர்களிடம் வாங்கிகொண்டுபோய் தங்களுடைய ஊர்களில் சில்லறை வியாபாரம் செய்கிறார்கள்.
இங்குள்ள மூலப்பிள்ளையார் கோவில் அருகில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கிரீத் என்பவருக்கு சொந்தமான குடோன் ஒன்று உள்ளது. மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கி கொண்டுவந்து இங்குள்ள கடைகாரர்களுக்கு சப்ளை செய்து வருகிறார்.
கிரீத், குஜராத்தில் இருந்து மளிகை பொருட்களை வரவழைத்து, அதில் கலப்படம் செய்வதாக மாவட்ட ஆட்சியர் மகரபூசனத்துக்கு புகார் சென்றுள்ளது. இதைத்தொடர்ந்து, உடனடியாக அந்த குடோனில் சோதனை நடத்தும்படி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதாவுக்கு உத்தரவிட்டார்.
அதனடிப்படையில், உணவுபாதுகப்பு துறை பணியாளர்கள் குழு, சம்மந்தப்பட்ட குடோனுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அந்த குடோனில் உள்ள பொருட்களை ஆய்வு செய்ததில், மளிகை பொருட்களில் பலத்த கலப்படம் இருப்பது தெரியவந்தது.
மிளகு, சீரகம், வெந்தயம், கசகசா, சோம்பு உள்ளிட்டவற்றில், மரக்குச்சிகளையும், பட்டைகளையும் கலப்படம் செய்து வைத்திருந்தனர். 500 மூட்டைக்கும் மேல் இருந்த பொருட்களில் கலப்படம் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து, கலப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், குடோனுக்கு சீல் வைத்தனர்.
பறிமுதல் செய்த கலப்பட பொருளை, ஆய்வுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை, உணவு பாதுகாப்பு துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இந்த கலப்பட பொருட்களின் மொத்த மதிப்பு, 15 லட்சம் ரூபாய் ஆகும். கலப்படம் உறுதி செய்யப்படும் பட்சத்தில், சம்மந்தப்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாக்டர்.அனுராதா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications