புது ரேஷன் கார்டு வேணுமா... ரூ. 2000 ரூபாய் லஞ்சம் கொடு – சேலத்தில் பெண் அதிகாரி கைது
சேலம்: சேலத்தில் புது ரேஷன் கார்டு வழங்க ரூபாய் 2,000 லஞ்சம் வாங்கிய வட்ட வழங்கல் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், வலசையூர் அருகேயுள்ள மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் சுரேஷ்குமார். விசைத்தறித் தொழிலாளியான இவர் தனக்கு குடும்ப அட்டை வழங்கக் கோரி கடந்த 2013 ஆம் ஆண்டு சேலம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அப்போது, ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றதால், தேர்தல் முடிந்த பின்னர் குடும்ப அட்டை வழங்குவதாகக் கூறிய அதிகாரிகள், கடந்த 11 மாதங்களாக குடும்ப அட்டை வழங்காமல் கால தாமதம் செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், சுரேஷ் கடந்த மாதம் சேலம் கிழக்கு தாலுகா வட்ட வழங்கல் அதிகாரி சுந்தரியைச் சந்தித்து முறையிட்டார். அப்போது சுந்தரி, தனக்கு ரூபாய் 2 ஆயிரம் லஞ்சம் தந்தால், புதிய குடும்ப அட்டை வழங்க ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்.
ரேஷன் கார்டு வாங்க லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ் சேலம் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துறையை துணைக் கண்காணிப்பாளர் சந்திரமெளலியிடம் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார்.
அவரது அறிவுரையின்படி, ரசாயனம் தடவிய 2,000 க்கான ரூபாய் நோட்டுகளை வட்ட வழங்கல் அதிகாரி சுந்தரியிடம் செவ்வாய்க்கிழமை மாலை சுரேஷ் கொடுத்தார்.
சுந்தரி அந்த பணத்தை பெற்றுக்கொண்டதும், அங்கே மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் சுந்தரியைக் கைது செய்தனர். பின்னர், அவரை சேலத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.