குறும்பு செய்த 3 வயது மகனுக்கு இரும்புக் கம்பியால் சூடு – தாய் கைது
சேலம்: சேலத்தில் தன்னுடைய மகனுக்கு பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் சூடு போட்ட தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆத்தூர் அருகில் உள்ள முல்லைவாடியைச் சேர்ந்தவர் கட்டட கூலித்தொழிலாளி மணிகண்டன். இவரது மனைவி பிரேமா. இவர்களுடைய 3 வயது மகன் அருண்குமார்.
இந்நிலையில் கடன் தொல்லை கழுத்தை நெறித்ததால் ஏழு மாதங்களுக்கு முன்னால் மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து பிரேமா தனது மகன் அருண்குமாரை அழைத்துக் கொண்டு தன்னுடைய தாயார் லட்சுமி வீட்டுக்கு சென்று விட்டார்.
நேற்று முன்தினம் பிரேமா தன்னுடைய மாமனாரைப் பார்க்கச் சென்றார். அப்போது அவருடைய மாமனார் முருகேசன், குழந்தை அருண்குமார் கை, கால்களில் மூன்று இடங்களில் சூடு போடப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.
இதனைப் பற்றி கேட்டபோது சொல்பேச்சு கேட்காததால் சூடு போட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து முருகேசன் குழந்தையை கெங்கவல்லி மருத்துவமனையில் சேர்த்துவிட்டு மருமகள் பிரேமா மீது போலீசில் புகார் அளித்தார்.
இதனையடுத்து பிரேமா கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் சேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications