சல்மான் குர்ஷித்தின் பயணம் தவறு.. கருணாநிதி

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு கருணாநிதி அளித்த பதில்கள் வருமாறு...
செய்தியாளர்: காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வது பற்றி தமிழகச் சட்டப்பேரவையில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும், தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்டுள்ள பயணம் குறித்து உங்கள் கருத்து?
பதில்: அது தவறு என்பது தான் என்னுடைய கருத்து. தமிழக மக்களின் உணர்வுகளை இப்படியெல்லாம் மத்திய அரசு புறக்கணிக்கக் கூடாது என்பது தான் என்னுடைய நிலைப்பாடு.
செய்தியாளர்: "டெசோ" அமைப்பின் சார்பில் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படுமா?
பதில்: "காமன்வெல்த்" மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்று "டெசோ" அமைப்பின் சார்பில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீண்டும் "டெசோ" உறுப்பினர்களைக் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.
செய்தியாளர்: தஞ்சையில் முள்ளிக்கால் முற்றம் எழுப்பப்படும் வரை காத்திருந்த தமிழக அரசு, அது கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழாவும் நடந்த பிறகு காவல் துறையினரை விட்டு இடிக்கச் சொல்லியிருக்கிறார்கள். நேற்றைய தினம் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தீர்மானம் போடுகிறார்கள். இது அதிமுக வினரின் இரட்டை நிலை அல்லவா?
பதில்: "இரட்டை நிலை" தான் இன்றைய இந்த அரசின் அணுகுமுறை என்பதை பழந்தமிழ்ச் சின்னங்களையும், வரலாற்றுப் பதிவுகளையும் ஒழிப்பதே தங்கள் கடமை என்று கருதிச் செயல்படுகின்ற பல செயல்களிலிருந்து புரிந்து கொள்ளலாமே? இரட்டை நிலை எடுப்பது தான் இந்த அரசின் வழக்கமான செயல்களில் ஒன்று என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அவற்றில் இதுவும் ஒன்று.
செய்தியாளர்: ஏற்காடு இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு நீங்கள் செல்லத் திட்டமிட்டிருக்கிறீர்களா?
பதில்: திமுக பொருளாளர், மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்கிறார். என் உடல் நிலை கருதி நான் இப்போது செல்லவில்லை என்றார் கருணாநிதி..












Click it and Unblock the Notifications