உப்பு காலியாவதாக வதந்தி.. நள்ளிரவில் மளிகை கடைகளில் குவிந்த மக்கள்.. கோபியில் பரபரப்பு
உப்பு பற்றாக்குறை நிலவுவதாக வெளியான தகவலை தொடர்ந்து, மக்கள் மளிகை கடைகளில் குவிந்ததால் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு: கோபிச்செட்டிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் உப்பு பற்றாக்குறை நிலவுவதாக திடீர் வதந்தி பரவியதால் நள்ளிரவு நேரத்தில் மளிகை கடைகளில் உப்பு வாங்க மக்கள் குவிந்தனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு வட இந்தியாவில் குறிப்பாக, உத்தரபிரதேசத்தில் உப்பு பற்றாக்குறை குறித்த வதந்தி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அந்த வதந்தி, தற்போது தமிழகம் வரை பரவியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்திலும் நேற்றிரவு வதந்தி காட்டுத்தீ போல பரவியது. உப்பு காலியாகிவிடக் கூடாது என்பதற்காக மக்கள் மளிகை கடைகளில் குவிந்தனர். பூட்டியிருந்த கடைகளையும் சென்று தட்டி உப்பு பெற்றனர். ஆனால் பிறகுதான் அது புரளி என தெரியவந்தது. புரளி காரணமாக ஒரு மூட்டை உப்பு ரூ.700 என்ற அளவில் விலையேற்றம் அடைந்திருந்தது. மக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என அரசு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.