மணல் மேடால் திணறும் மணப்பாடு மீனவர்கள்- தூண்டில் பாலம் அமைக்க கோரிக்கை
தூத்துக்குடி: மணப்பாடு கடலில் திடீரென தோன்றிய மணல் மேடால் மீனவர்கள் படகை கடலுக்கு கொண்டு செல்ல முடியாமல் திண்டாடி வருகின்றனர். அதை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
உடன்குடி அருகே மணப்பாடு கடற்கரை கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மணப்பாடு கடல் எபபோதும் தென் பகுதியில் ஆவேசமாகவும், வடபகுதியில் அமைதியாகவும் காணப்படும். வருடத்தின் சில மாதங்கள் கடலின் வடபுறம் மணல் மேடு தோன்றுவதும் பின்னர் இயற்கையாக அது மறைவதும் நடக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலின் வடபகுதியில் திடீரென மணல் மேடு தோன்றி தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் மீன்பிடி படகுகள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஜேசிபி இயந்திரம் மூலம் மணலை அகற்றி படகை கடலுக்கு கொண்டு செல்ல மீனவர்கள் எடுத்த முயற்சி பலன் தரவில்லை.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் முறையிட்டும் பலன் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் இப்பகுதி மீனவர்கள் கடந்த சில நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் மாலை மீன்வளத்துறை மற்றும் மணப்பாடு மக்களின் ஓத்துழைப்புடன் மணல் மேட்டை அகற்றும் பணியில் ஜேசிபி மற்றும் டிராக்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன.
மணலை அகற்றிய சிறிது நேரத்தில் மீண்டும் மீண்டும் மணல் வந்து கொண்டே இருந்ததால் இந்த பணியில் ஈடுபட்டவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் அவர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.
இந்த மணல் மேட்டால் மீனவர்கள் கடலுக்குள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மணல் மேட்டை கடந்தால் தான் கடலுக்குள் இறங்க முடியும். மணலை அகற்ற அகற்ற வந்து கொண்டே இருப்பதால் அதிகாரிகள் முயற்சியை கை விட்டு விட்டனர். இதனால் இங்கு தூண்டில் பாலம் அமைக்க வேண்டும் என்று மீனவர் சங்க தலைவர் ஏரேமியோஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.