தமிழர் உரையாடல், நாட்டுப்புற ஒலிம்பிக்ஸுடன் மதுரையில் சங்கம் 4 தமிழ் விழா!
மதுரை: சங்கம்4 மாபெரும் தமிழ் விழா மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இதில் முதலாவது உலகத் தமிழர் உரையாடல் மற்றும் நாட்டுப்புற ஒலிம்பிக்ஸ் ஆகியவை இடம்பெற உள்ளன.
சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் சங்கம் 4 மாபெரும் தமிழ் விழா நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 12 முதல் 21-ந் தேதி வரை மதுரையில் பல்வேறு தலைப்புகளில் சங்கம்4 தமிழ் விழா நடைபெற உள்ளது.

ஆகஸ்ட் 12-ந் தேதி முதலாவது உலகத் தமிழர் உரையாடல் நிகழ்ச்சி நடைபெறும். ஆகஸ்ட் 13-ந் தேதியன்று நாகமலை புதுக்கோட்டை பில்லர் மையத்தில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஆகஸ்ட் 15-ந் தேதியன்று மதுரை பில்லர் மையத்தில் 'தாய்மொழி மாநாடு' நடைபெறுகிறது. இதில் பேரா. நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ஆகஸ்ட் 16, 17 ஆகிய தேதிகளில் மதுரை பாத்திமா கல்லூரியில் நாட்டுப்புற ஒலிம்பிக்ஸ் நடத்தப்படுகிறது. இதில் சிலம்பம், சடுகுடு, கிளித்தட்டு, வழுக்குமரம் ஏறுதல், இளவட்டக் கல், உறியடி, மல்லர் கம்பம், தாயம், பல்லாங்குழி, களரி, வளரி, மாட்டு வண்டித் தோரணம், கிட்டிப்புள், பம்பரம், கோலி, வடம் இழுத்தல், ஏழு கல்லாட்டம், மட்டாங்கல், குதிரை சில்லாக்கு என் தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை கொண்ட ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற உள்ளது.

மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆகஸ்ட் 21-ந் தேதி ஈழத் தமிழ் விதவை பெண்களுக்கு நிதி அளிக்கும் வகையிலான டிரம்ஸ் சிவமணி, நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கேற்கும் நிறைவு நிகழ்ச்சி நடைபெறும்.
முன்னதாக ஆகஸ்ட் 7-ந் தேதியன்று மாமதுரை மாரத்தான் என்ற பெயரில் மாரத்தான் ஓட்டம் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications