2004ல் நடந்த பயங்கரம்... சங்கரராமன் கொலை.. ஒரு பிளாஷ்பேக்!
சென்னை: சங்கரராமன் படுகொலை.. தமிழகத்தை உலுக்கிய மிகப் பெரிய பரபரப்பான சம்பவங்களில் ஒன்று.
யாருமே அறிந்திராத ஒரு நபர்தான் இந்த சங்கரராமன். ஆனால் அவரது கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. தமிழகத்தை மட்டுமல்லாமல், இந்தியாவையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய கொலையாக மாறிப் போனது. காரணம், இந்தக் கொலையைச் செய்ய கூலிப்படையை ஏவி விட்டவர் காஞ்சி ஜெயேந்திர சங்கராச்சாரியார் என்று அரசு அவரை அதிரடியாக கைது செய்ததால்.
அதுவரை ஜெயேந்திரருக்கு மிக நெருக்கமானவராக கருதப்பட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு ஜெயேந்திரரைக் கைது செய்தபோது அத்தனை பேரும் அதிர்ந்து போகத்தான் செய்தார்கள்.
இப்போது முதல்வராக இருப்பதும் ஜெயலலிதா தான். ஆனால், இந்தக் கொலை வழக்கில் ஜெயேந்திரர் உள்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்ட நிலையில், சங்கரராமன் கொலை குறித்த ஒரு பிளாஷ்பேக்.

வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மேலாளராக இருந்தவர் சங்கரராமன். இவரைப் பற்றி பல சர்ச்சைகள் உள்ளன. பட்டுப் பட்டென்று பேசக் கூடியவர், போட்டுக் கொடுப்பவர் என்று நிறைய உள்ளன. 2004ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி கோவிலில் உள்ள அலுவலகத்தில் இவர் பிணமாகக் கிடந்தார். கூலிப்படையினர் கோவிலுக்குள் புகுந்து அலுவலகத்திலேயே வைத்து இவரை வெட்டிச் சாய்த்து விட்டுப் போய் விட்டனர்.

ஜெயேந்திரர் அதிரடி கைது
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் பெயர் அடிபடத் தொடங்கியதால் தமிழகமே பரபரப்பானது. நாடும் உன்னிப்படைந்தது. 2004 நவம்பர் 11ம் தேதி ஆந்திர மாநிலம் மெஹபூப் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார் ஜெயேந்திரர். அது தீபாவளி நாள்.

விஜயேந்திரரும் கைது
2005ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி விஜயேந்திரரும் கைதானார்.

அடுத்தடுத்து 24 பேர் கைது
கொலை நடந்த நாள் முதல் 2005 ஜனவரி 10ம் தேதி வரையிலான காலத்தில் மொத்தம் 24 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்களில் இருவர் சங்கர மட நிர்வாகிகள், ஒருவர் விஜயேந்திரரனின் தம்பி ரகு.

ஜெயேந்திரரின் வாக்குமூலம் வெளியாகி பரபரப்பு
இந்த நிலையில் ஜெயேந்திரர் போலீஸ் பிடியில் இருந்தபோது பேசிய வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல லட்சம் பேரால் மதிப்புடன் பார்க்கப்பட்ட ஜெயேந்திரர் படு பரிதாபமாக அந்த வீடியோவில் காட்சி தந்தது பலரையும் அதிர வைத்தது.

2005ல் ஜெயேந்திரருக்கு ஜாமீன்
2005ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி ஜெயேந்திரருக்கு ஜாமீன் கிடைத்தது.அடுத்து பிப்ரவரி மாதம் விஜயேந்திரர் ஜாமீனில் வெளி வந்தார்.

செங்கல்பட்டிலிருந்து புதுவைக்கு மாற்றம்
இந்த பரபரப்பான வழக்கு செங்கல்பட்டு கோர்ட்டில் விசாரணையில் இருந்தது. ஆனால் இதை அங்கிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற ஜெயேந்திரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், 2005ம் ஆண்டு அகடோபர் 26ம் தேதி புதுச்சேரி செஷன்ஸ் கோர்ட்டுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டது.

2005 நவம்பர் 27 முதல் புதுவையில்
2005ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி புதுச்சேரி கோர்ட்டில் வழக்கு விசாரணை தொடங்கியது.

இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவு
வழக்கு விசாரணை புதுவையில் தொடங்கி இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து வாய்தா
புதுச்சேரி கோர்ட்டில் விசாரணை பல காலத்திற்கு இழுத்தடிக்கக் காரணமே அடுத்தடுத்து ஜெயேந்திரர் தரப்பு வாய்தா கேட்டதும், விசாரணைக்கு வராமல் இருந்ததுமே. பலமுறை விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

தடை தடைக்கு மேல் தடை
மேலும் விசாரணைக்கு அடுத்தடுத்து இடைக்காலத் தடையையும் வாங்கி வந்தது ஜெயேந்திரர் தரப்பு.

தீவிரமடைந்த விசாரணை
இந்த நிலையில் ஒரு வழியாக விசாரணை சூடுபிடித்தது. மொத்தம் 187 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

82 பேர் பிறழ் சாட்சியாக மாறி பரபரப்பு
ஆனால் 82 சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறி வாக்குமூலம் அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சாட்சிகளை மிரட்டி விலைக்கு வாங்கி விட்டதாக சங்கரராமன் குடும்பத்தினர் குமுறினர்.

ஒரே ஒரு அப்ரூவர்
இந்த வழக்கில் ரவிசுப்ரமணியம் மட்டுமே அப்ரூவராக மாறினார். சாட்சிகள் பலவும் பிறழ் சாட்சிகளாக மாறியதால் வழக்கின் நிலை பெரும் கேள்விக்குறியானது.

நான்கு நீதிபதிகள்
புதுச்சேரி நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு வந்த பின்னர் இதுவரை நான்கு நீதிபதிகள் இதை விசாரித்து விட்டனர். முதலில் சின்னப்பாண்டி விசாரித்தார். பின்னர் கிருஷ்ணராஜா, அடுத்து ராமசாமி, கடைசியாக சி.எஸ்.முருகன் இதை விசாரித்தனர்.

2011ல் வந்த திடீர் தடை
இந்த நிலையில், 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராமசாமி, ஜெயேந்திரர் தரப்பிடம் பேரம் பேசியது தொடர்பான ஆடியோ வெளியானதே இதற்குக் காரணம்.

ராமசாமி போனார் முருகன் வந்தார்
இதையடுத்து நீதிபதி ராமசாமி மாற்றப்பட்டார். நீதிபதியாக சி.எஸ். முருகன் நியமிக்கப்பட்டார்.

முக்கியக் குற்றவாளி கொலை
இந்த நிலையில், சங்கரராமன் கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரும், கூலிப்படையைச் சேர்ந்தவருமான கதிரவன், சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு அருகே ஒரு கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டார். இந் நிலையில் இந்த வழக்கில் மிச்சமுள்ள 23 பேரும் இன்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.












Click it and Unblock the Notifications