சமஸ்கிருத வார கொண்டாட்டத்தை எதிர்த்து சென்னை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சமஸ்கிருத வாரம் கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதத்தை பள்ளியின் முதல்வர் படித்தபோது அதில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,
ஆகஸ்ட் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படக் கூடாது. அப்படியும் கொண்டாடினீர்கள் என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் வெடிகுண்டு வெடிக்கும், இப்படிக்கு திராவிடம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உடனே இது பற்றி தலைமையாசிரியர் பரங்கிமலை போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அந்த பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.