சப் கலெக்டர் முதல் முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி வரை... சாந்தா ஷீலா நாயர் பயணம்
தமிழக அரசியலில் மிகவும் முக்கியமான காலக்கட்டத்தில் முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி பதவியில் இருந்து சாந்த ஷீலா நாயர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: 2016ம் ஆண்டு ஜூன் மாதம் முதல், முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரியாக இருந்த சாந்த ஷீலா நாயர், திட்டக் குழுவின் தலைவராக இருந்தவர்.
தனது சொந்த காரணங்களுக்காக தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை ராஜினாமா செய்வதாக சாந்த ஷீலா நாயர் கூறியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ள ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயரின் திடீர் ராஜினாமா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

•கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சாந்தா ஷீலா நாயர். இவர் 1973ம் ஆண்டு தமிழக பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியாவார். சாந்தா ஷீலா நாயர், திண்டுக்கல் உதவி ஆட்சியராகவும், திருச்சி மாவட்ட ஆட்சியராகவும் திறம்பட பணியாற்றியவர்.
•இவர் தமிழகத்தில் பல்வேறு முக்கியத் துறைகளில் செயலாளராக இருந்துள்ளார். தமிழக அரசின் உள்துறை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராகவும், சென்னை பெருநகர குடிநீர் வாரிய தலைவர் உள்பட பல பொறுப்புகளில் முத்திரைபதித்தவர்.
•மத்திய அரசாங்கத்தின் கனிமவளத்துறை செயலாளராக பணியாற்றினார். கடந்த 2010ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். டெல்லியில் பணியாற்றி ஓய்வுபெற்றவுடன், கடந்த 2011ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு பதவி ஏற்றபோது, திட்டக்குழு துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த பதவியில் 5 ஆண்டுகள் திறமையாக பணி புரிந்தார்.
•2016ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்த உடன் தனிப்பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டார் சாந்தா ஷீலா நாயர்.
•கூடுதல் முதன்மை செயலராக இருந்து ஓய்வு பெற்ற அதிகாரி என்றாலும், சாந்த ஷீலா நாயரின் அனுபவமும், திறமையும் தனது அரசுக்கு தேவை என்பதால், அவருக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனிப்பிரிவு அதிகாரி பதவியைக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
•கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக, அதிமுக.,வின் தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தும் பணிகளை சாந்தா ஷீலா நாயர் மேற்பார்வை செய்துவந்தார். தற்போது திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக, ஷீலா நாயர் கூறியுள்ளார். இதற்கான ராஜினாமா கடிதத்தில், சொந்த காரணங்களுக்காக, பதவி விலகுகிறேன் என, சாந்தா ஷீலா நாயர் தெரிவித்துள்ளார்.
•ஜெயலலிதாவினால் நியமிக்கப்பட்டு பல ஆண்டுகள் அவருக்கு கீழே பணியாற்றிய பல அதிகாரிகள் தற்போது தங்களின் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications