குற்றாலநாதரை தரிசித்து விட்டு முருகனைத் தேடி ஓடி வரும் சரத்குமார்!
சென்னை: தென்காசி சட்டசபை உறுப்பினராக வலம் வந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தற்போது திருச்செந்தூருக்கு இடம் மாறியுள்ளார்.
கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் சரத்குமார் தென்காசி தொகுதியில் போட்டியிட்டார். அவரது கட்சியின் சார்பில் இன்னொரு வேட்பாளராக நாங்குநேரியில் எர்ணாவூர் நாராயணன் போட்டியிட்டார். இருவரும் வென்றனர்.
இருவருமே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றனர். சமத்துவ மக்கள் கட்சியாக வலம் வந்த அவர்கள் சமீபத்தில் பிளவுபட்டனர். ஆளுக்கு ஒரு கட்சியாக மாறினர். ஆனால் காலத்தின் கோலமாக இருவருமே தற்போது அதிமுக கூட்டணியில் உள்ளனர்.

பாஜகவுக்குப் போய்
அதிமுகவுடன் கருத்து வேறுபாடு கொண்டு கூட்டணியை விட்டு வெளியேறிய சரத்குமார் பாஜக பக்கம் போனார். அங்கு போன அவர், விஜயகாந்த்தையும் பாஜக கூட்டணிக்கு வருமாறு அழைத்தார்.

யு டர்ன் போட்டு போயஸ் தோட்டம்
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் அவர் அப்படியே யு டர்ன் போட்டு போயஸ் தோட்டத்திற்குப் போய் ஜெயலலிதாவைப் பார்த்து விட்டு முகம் முழுக்க மகிழ்ச்சி பொங்க வந்தார்.

தொகுதி மாறி சீட்
தற்போது இவரது கட்சிக்கு ஒரு சீட் கொடுத்துள்ளார் ஜெயலலிதா. ஆனால் தென்காசிக்குப் பதில் திருச்செந்தூரைக் கொடுத்துள்ளார். சரத்குமார் அதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பழுதில்லையே
ஆரம்பத்தில் இவருக்கு சீட் கிடையாது. பிரசாரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப் போகிறார் ஜெயலலிதா என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை பொய் என்று ஜெயலலிதா நிரூபித்துள்ளார்.

எர்ணாவூருக்கு அல்வா
மறுபக்கம் எர்ணாவூர் நாராயணனுக்கு ஒரு சீட் கூட தராமல் திராட்டில் விட்டுள்ளார் ஜெயலலிதா. அந்த வகையில் சரத்குமாருக்கு மச்சம்தான் என்று கூறலாம்.












Click it and Unblock the Notifications