ஜல்லிக் கட்டுக்கு தடை கோரி உண்ணாவிரதம் ஏன்? சரத்குமார் "சுய சரித்திர" விளக்கம்!!
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க இரண்டு வாரங்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கவும் தயாராக இருக்கிறேன் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி சரத்குமார் தலைமையில் மதுரையில் இன்று ஏராளமானோர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு பேசிய சரத்குமார் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீர விளையாட்டு மட்டும் அல்ல, அது கலாச்சாரம் சார்ந்தது. ஜல்லிக்கட்டு பற்றிய சரியான கருத்துகள் தெரிவிக்கப்படாததால் உச்ச நீதிமன்றத்தில் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, ஜல்லிக்கட்டை அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இது ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த விளையாட்டு நடைபெற்று வருகிறது. இதற்காக இரண்டு வாரங்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கவும் தயாராக இருக்கிறேன்.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தால் தமிழகத்தின் கலாச்சார, பண்பாடு அழியும் நிலை ஏற்படும். நான் சம்பந்தமே இல்லாமல் இந்த ஜல்லிக்கட்டுக்காக போராடவில்லை.
எனது தாத்தா மிகச் சிறந்த ஜல்லிக்கட்டு வீரர். அவர் பஞ்ச கல்யாணி என்ற ஜல்லிக்கட்டு காளையையும் வளர்த்து வந்தார். அந்த காளையை யாருமே அடக்க முடியாத நிலை இருந்தது.
அந்த காளை இறந்த நிலையில், அதற்கு கோவில் கட்டி அதனை இன்றளவும் நாங்கள் வழிபட்டு வருகிறோம். ஆகவே, ஜல்லிக்கட்டு விளையாட்டை அனுமதிக்க வேண்டும் என்கிற தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் நாம் தொடர்ந்து போராட வேண்டும்.
அப்போதுதான் தமிழக அரசின் கோரிக்கையை டெல்லியில் உள்ள மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் போய் சேரும்.
இவ்வாறு சரத்குமார் பேசினார்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் புதிய தமிழகம் எட்சி எம்எல்ஏ ராமசாமி, உசிலம்பட்டி எம்எல்ஏ கதிரவன், சமத்துவ மக்கள் கட்சி எம்எல்ஏ எர்ணாவூர் நாராயணன், வீர விளையாட்டு சங்க தலைவர் ராஜசேகர் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications