உயிரை தியாகம் செய்தாவது கர்நாடகா அணை கட்டுவதை தடுப்பேன்: சரத்குமார்
கும்பகோணம்: என் உயிரை கொடுத்தேனும் காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதை தடுப்பேன் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்ககூடாது என்பதை வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் தலைமையில் கும்பகோணம் காந்தி பூங்காவில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் உள்பட 10 மாவட்டங்களை சேர்ந்த சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். அவர்கள் கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்பது தொடர்பான முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே இரண்டு இடங்களில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அணைகள் கட்டப்பட்டால் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பது கனவாகி விடும். இதனால் காவிரி நீரை மட்டுமே நம்பியுள்ள டெல்டா மாவட்டங்களில் விவசாய தொழில் முற்றிலும் பாதிக்கப்படும். தமிழக மக்களுக்கு குடிநீர் கிடைப்பது கூட அரிதாகி விடும் என்றார்.
கர்நாடகா அரசு அணை கட்ட முயற்சிப்பதை தடுக்கும் வகையில் கர்நாடக முதல்வர் சித்தாராமையாவை நேரில் சந்தித்து சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மனு கொடுக்க உள்ளதாகவும். இந்த பிரச்சனைக்காக பொதுமக்கள் அனைவரும் போராடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்து கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை தடுத்து ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் சரத்குமார் கூறினார்.
தமிழ் உணர்வுகள், தமிழர்களின் ஒற்றுமை ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே வருகிறது. எனவே நமது சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் தமிழ் உணர்வுகளோடும், ஒற்றுமை உணர்வுடன் போராட வேண்டும். இதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக கூறிய சரத்குமார், எனது உயிரை தியாகம் செய்தாவது கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை தடுப்பேன் என்றார்.
காவிரியின் குறுக்கே கர்நாடாக அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசியல் கட்சியினர் ஓரணியில் திரளவேண்டும் என்று கூறிக்கொண்டே தனித்தனியாக போராடிவருகின்றனர். அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்து முதலில் பேசி போராட்டத்தை முன்னெடுத்தால் அணை கட்டுவதை தடுக்கலாம் என்கின்றனர் டெல்டா மாவட்ட விவசாயிகள்.