ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட தமிழக அரசுக்கு சரத்குமார் கோரிக்கை!
சென்னை: தமிழகம் மட்டுமல்லாது மகாராஷ்டிரா, ஹரியானா போன்ற மாநிலங்களிலும் மாடுபிடி விளையாட்டுகள் வேண்டும் என்று எழுந்துள்ள மக்கள் குரலை நிறைவேற்றுகிற வகையில் மத்திய அரசு அவசர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பொங்கல் திருநாள் விரைவில் வர இருக்கிற சூழ்நிலையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்கள் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன.
தமிழகத்தில் ஏறத்தாழ 150-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றுவந்தது. ஆனால் பல்வேறு கெடுபிடிகள் காரணமாகவும், அரசின் அனுமதி பெற்று உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி நடத்த வேண்டிய சூழ்நிலை காரணமாகவும், கடந்த ஆண்டு ஏறத்தாழ 30 இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி அதிகாரபூர்வமாக நடத்தப்பட்டது.
இத்தகைய நிலை நீடித்தால் ஜல்லிக்கட்டு என்ற ஒரு மாடுபிடி வீர விளையாட்டு இருந்தது என்று புத்தகங்களில் மட்டுமே எதிர்கால சந்ததியினர் வாசிக்க முடியும். இத்தகைய சூழ்நிலையில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்டுவதில் எப்பொழுதும் முன்னோடியாக விளங்குகிற ஜெயலலிதா, ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டு தொடர்ந்து நடைபெறுவதற்கு ஆவண செய்து ஜல்லிக்கட்டை நடத்தும் அறிவிப்பை இனிப்பான பொங்கல் செய்தியாக அறிவிக்கச் செய்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
அதே போன்று, தமிழகம் மட்டுமல்லாது மகாராஷ்டிரா, ஹரியானா போன்ற மாநிலங்களிலும் மாடுபிடி விளையாட்டுகள் வேண்டும் என்று எழுந்துள்ள மக்கள் குரலை நிறைவேற்றுகிற வகையில் மத்திய அரசும் அவசர நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று சரத்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.