ரசிகர்களே... எம்ஜிஆர் வீட்டை பாதுகாத்திடுங்கள்!- சரோஜாதேவி
ரசிகர்களே... வள்ளலாய் வாழ்ந்து மறைந்த எம்ஜிஆர் வீட்டைப் பாதுகாத்திடுங்கள் என்று நடிகை சரோஜா தேவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்திய பெருமழை வெள்ளத்தில் அமரர் எம்ஜிஆர் வாழந்த ராமாவரம் தோட்ட இல்லம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அவர் பயன்படுத்திய பொருள்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இது எம்ஜிஆரின் ரசிகர்கள் பலருக்கும் பெரும் வேதனைய அளித்துள்ளது.
சரோஜாதேவி
எம்ஜிஆருடன் பல படங்களில் ஜோடியாக நடித்தவரும், அவரை தெய்வமாகப் போற்றுபவருமான நடிகை சரோஜா தேவி இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில், "சென்னை, புதுச்சேரி, கடலூர் உள்பட பல நகரங்கள் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்குள்ளானதை அறிந்து மிகுந்த வேதனைக்குள்ளானேன். தமிழ்நாடு எனக்கு புகுந்த வீடு மாதிரி. எனவே மழை வெள்ள சேதத்துக்கு என்னால் முடிந்த உதவியை செய்ய முடிவு செய்து இருக்கிறேன்.
ரூ 5 லட்சம்
வருகிற ஜனவரி 6-ந் தேதி இதற்காக நான் சென்னை வருகிறேன். வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்க முடிவு செய்து இருக்கிறேன்.
எம்.ஜி.ஆர். வீடு
சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில், எம்.ஜி.ஆர். வீடு பாதிக்கப்பட்டிருப்பதையும், அவர் பயன்படுத்திய பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதையும் அறிந்து மிகுந்த வேதனைப்பட்டேன். அழுகையாக வந்தது. மனிதராக பிறந்து தெய்வமாக போனவர், அவர். அவருடைய வீட்டில் உட்கார்ந்து நான் சாப்பிட்டு இருக்கிறேன்.
ரசிகர்கள்
எம்.ஜி.ஆர். வீட்டை அவருடைய ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து பாதுகாக்க வேண்டும். ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் போதும். அவர் வாழ்ந்த இடத்தை சோலையாக மாற்றி விடலாம்.
கோடிக்கணக்கில்
அந்தக்காலத்தில் பிரபல கதாநாயகிகளாக இருந்த நாங்கள் ஆயிரக்கணக்கில்தான் சம்பளம் வாங்கினோம். இப்போது உள்ள கதாநாயகிகள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். சீக்கிரமே சம்பாதித்து சொந்த ஊருக்கு ஓடி விட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
சிம்பு விவகாரம்
சிம்பு விவகாரத்தை பத்திரிகைகளிலும், டி.வி.களிலும் பார்த்தேன். அவருடைய தவறுக்கு அவர் மன்னிப்பு கேட்டு விடலாம். நாமும் மன்னித்து விடலாம். அவருடைய அம்மாவும், அப்பாவும் உருகுவதைப் பார்த்தால், பாவமாக இருக்கிறது'', என்றார்.