தொடரும் பின்னடைவுகளால் பெரும் கவலை.. டிவியே கதி என்றிருக்கிறாராம் சசிகலா!
குடும்பத்தினருக்கு ஏற்படும் பின்னடைவுகளால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா பெரும் கவலையடைந்துள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சென்னை: குடும்பத்தினருக்கு ஏற்படும் பின்னடைவுகளால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா பெரும் கவலையடைந்துள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் தம்மை பார்க்கவருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டதால் சசிகலா பெரும்பாலும் டிவியை பார்த்து நேரத்தை கழிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் கடந்த பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து சகல வசதிகளோடும் விஐபி கைதிக்கான சலுகையோடு வலம் வந்தார் சசிகலா.
சிறையில் அவரை பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை மட்டும் அதிகமாகவே இருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து அதுவும் தற்போது குறைந்துள்ளது.

குறையும் பார்வையாளர்கள்
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக சிறையில் அவரை சந்திப்பவர்களின் எண்ணிக்கையானது குறைந்து உள்ளது என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி சசிகலாவின் வக்கீல்கள் தவிர்த்து 19 பேர் மார்ச், ஏப்ரல் மாதங்களில் சிறையில் அவரை சந்தித்து உள்ளனர்.

வெறும் 3 பேர் மட்டும்
ஆனால் கடந்த சிலநாட்களாக வெறும் மூன்று பேர் மட்டுமே அவரை சந்தித்து பேசி உள்ளனர், அதில் ஒருவர் சென்னையை சேர்ந்த டாக்டர் என தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட இளவரசி உடல்நலக் குறைவு காரணமாக சிறை மருத்துவமனையிலே அதிக நேரத்தை கழிப்பதாக கூறப்படுகிறது.

அனுமதியை குறைத்த நிர்வாகம்
இதனால் சசிகலா சிறையில் தனியாகவே உள்ளார் என கூறப்படுகிறது.. சாதாரண கைதிகளின் விதிமுறைகளின்படி உறவினர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே கைதிகளை சிறையில் பார்க்க முடியும். சசிகலாவிற்கு விஐபி அணுகுமுறை மறுக்கப்பட்டதால் அவரை சந்திக்க வருபவர்களுக்கு வழங்கப்படும் அனுமதியும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தினகரன் கைதால் கவலை
இதனிடையே இரட்டை இலைச் சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த புகாரில் தனது அக்காள் மகனான டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டதால் சசிகலா மிகுந்த கவலையில் இருப்பதாகவும் சிறைத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

டிவியே கதி-நம்பிக்கையில்லை
மேலும் இடைத்தேர்தல் ரத்து, வருமானவரித்துறை ரெய்டுஇ தினகரன் கைது என தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருவதால் சசிகலா எப்போதும் டிவியே கதி என்றிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் சசிகலா சிறைக்கு வந்தபோது இருந்த நம்பிக்கை தற்போது அவரிடம் இல்லை என்றும் சிறைத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications