ஜெயலலிதா "சீட்"டில் அமர்ந்தார் சசிகலா!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் அவர் அமரும் இருக்கையில் சசிகலா அமர்ந்து விஐபிகளை பார்த்து வருவது அதிமுகவினரை அதிர வைத்துள்ளது.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அடுத்த வாரிசாக அதிமுகவிரிடம் திணிக்கப்பட்டு வரும் சசிகலா, முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டில் அவர் அமர்ந்த சீட்டில் உட்கார்ந்து விஐபிகளை சந்திக்க ஆரம்பித்துள்ளார்.
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் பல வரலாறுகளை உள்ளடக்கியது. பல்வேறு பெரும் தலைவர்கள் முதல் இப்போதைய தலைவர்கள் வரை பலர் வந்து போன வீடு அது.
தனது வீட்டுக்கு வரும் விருந்தினர்களை சந்திக்க தனியாக அறையை வைத்திருந்தார் ஜெயலலிதா. அந்த அறையில்தான் விஐபி தலைவர்களை அவர் சந்திப்பார். அந்த அறையை தற்போது சசிகலாவும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.
அந்த அறையில் வைத்து நேற்று தினத்தந்தி அதிபர் பாலசுப்ரமணிய ஆதித்தனை அவர் சந்தித்தார். ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த
போயஸ் தோட்டத்திற்கு வந்த ஆதித்தன் அப்படியே சசிகலாவையும் சந்தித்தார். அப்போதுதான் ஜெயலலிதாவின் அறையில் வைத்து ஆதித்தனை சந்தித்தார் சசிகலா. மேலும் ஜெயலலிதா அமரும் அதே இருக்கையிலும் அவர் அமர்ந்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் பதவி, கட்சியைக் கைப்பற்றுதல், போயஸ் தோட்ட இல்லம் என படிப்படியாக ஜெயலலிதாவின் இடங்களைப் பிடித்து வரும் சசிகலா தற்போது ஜெயலலிதாவின் இருக்கையையும் கைப்பற்றியிருப்பது அதிமுகவினர் இடையே அடுத்தடுத்து அதிர்ச்சி அலைகளைப் பரப்பி வருகிறது.