ஓபிஎஸ் தவிர 134 எம்.எல்.ஏக்கள் ஆதரவும் தமக்கு இருப்பதாக சசிகலா மனு- ஆளுநர் மாளிகை ஷாக்!
அதிமுகவில் முதல்வர் பன்னீர்செல்வம் தவிர எஞ்சிய 134 எம்.எல்.ஏக்கள் ஆதரவுமே தமக்கே இருக்கிறது என ஆளுநர் வித்யாசகர் ராவிடம் சசிகலா மனு கொடுத்துள்ளார்.
சென்னை: அதிமுகவின் 134 எம்.எல்.ஏக்கள் ஆதரவும் தமக்கு இருப்பதாக ஆளுநர் வித்யாசகர் ராவிடம் அக்கட்சியின் தற்காலிக பொதுச்செயலர் சசிகலா தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் 136 எம்.எல்.ஏக்களில் ஜெயலலிதா மறைந்துவிட்டார். முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவின் தற்காலிக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.
அதே நேரத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு 5 முதல் 7 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது. இந்த நிலையில் இன்று ஆளுநர் வித்யாசகர் ராவை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க அதிமுக இடைக்கால பொதுச்செயலர் சசிகலா உரிமை கோரினார்.
அப்போது, தமக்கு ஓ. பன்னீர்செல்வம் தவிர அனைத்து எம்.எல்.ஏக்களின் ஆதரவும் அதாவது மொத்தம் 134 எம்.எல்.ஏக்களின் ஆதரவும் இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார் சசிகலா. அதுவும் 5 அதிமுக எம்.எல்.ஏக்கள் பகிரங்கமாக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் கை கோர்த்து ஆளுநரை சந்தித்த நிலையில் சசிகலா தமக்கே அனைத்து எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறியுள்ளார்.
இது ஆளுநர் மாளிகை வட்டாரங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரமும் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாம்.