என் விசுவாசி எடப்பாடி.. சிறையில் இருந்து மீட்பார்.. பெங்களூரு சிறையில் பெரும்நம்பிக்கையில் சசிகலா
எப்போதுமே விசுவாசத்தை வெளிப்படுத்தும் எடப்பாடி பழனிச்சாமி தம்மை சிறையில் இருந்து மீட்பார் என நம்பிக்கையோடு இருக்கிறார் சசிகலா.
சென்னை: தம்மை எப்படியும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீட்டுவிடுவார் என பெங்களூரு சிறையில் மிகப் பெரும் நம்பிக்கையில் இருக்கிறாராம் சசிகலா.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகால சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார் சசிகலா. சசிகலா பரோலில் வரக்கூடும் என கூறப்பட்ட நிலையில் அதிரடியாக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
சீராய்வு மனு
இந்த சீராய்வு மனு தாக்கல் விவகாரத்தில் முழு வீச்சில் செயல்பட்டவரே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான். என்னதான் ஓபிஎஸ் கோஷ்டி நெருக்கடி கொடுத்தபோதும் சசிகலாவுக்கான விசுவாசத்தை எடப்பாடி விட்டுத்தரவில்லை.
சசிகலா நெகிழ்ச்சி
இதனால் சசிகலா ரொம்பவே நெகிழ்ந்து போயுள்ளாராம். சிறையில் தம்மை சந்தித்த விவேக்கிடம் இதுபற்றி அதிகம் பேசியிருக்கிறார் சசிகலா.
ஓபிஎஸ் துரோகம்
அப்போது, கடந்த காலங்களில் ஓபிஎஸ் விசுவாசமாக இருப்பது போல நடித்து ஏமாற்றினார். அதனால்தான் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக அவரை ஓரம்கட்டி வைத்தோம். ஆனால் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்று மீண்டும் தலையெடுத்தார் ஓபிஎஸ். தற்போது துரோகியாகவே மாறிவிட்டார்.
சிறை மீட்பார் எடப்பாடி
ஆனால் ஒருபோதும் எடப்பாடி அப்படி விசுவாசம் இல்லாமல் இருந்ததே இல்லை. அன்று முதல் இன்று வரை ஒரே மாதிரியான விசுவாசத்தைத்தான் எடப்பாடி வெளிப்படுத்துகிறார். அவர் நிச்சயம் என்னை சிறையில் இருந்து மீட்பார் என பெரும் நம்பிக்கையோடு பேசியிருக்கிறார் சசிகலா.