தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் யார்?
சென்னை: தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக சசிகலா நடராஜனும் அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜியுடம் போட்டியிடுவார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தலும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நவம்பர் 19-ந் தேதி நடைபெற உள்ளது.
இத்தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிட வாய்ப்பு இல்லை என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் கடந்த சில நாட்களாக சசிகலா நடராஜன் போட்டியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதிமுகவில் 2-ம் கட்ட தலைவர்கள் என எவருமே இல்லை. அதிமுகவைப் பொறுத்தவரையில் ஜெயலலிதாவுக்கு சசிகலாதான் என்ற நிலை இருக்கிறது.
தற்போது முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சசிகலா நேரடி அரசியலுக்கு வரவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் தொகுதியில் அவர் போட்டியிடலாம் என்றே அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
அரவக்குறிச்சி தொகுதியைப் பொறுத்தவரையில் செந்தில் பாலாஜி முன்னர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? என்பதில் அவரது ஆதரவாளர்களுக்கே சந்தேகம் ஏற்பட்டுள்தாக கூறப்படுகிறது.
திருப்பரங்குன்றத்தில் சீனிவேல் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.