நவகிரகங்களின் கோபப்பார்வை எல்லாம் சசிகலா குடும்பத்தார் மேலதான் - ராசிபலன்
சசிகலா குடும்பமே அல்லோல கல்லோல பட்டுக்கிடக்கு... ஐடி ரெய்டு வந்ததில் இருந்தே அலறிக்கிடக்கிறது சொந்த பந்தங்கள்.
சென்னை: ஐடி ரெய்டுக்கு ஆளாகி கதிகலங்கி போயுள்ள சசிகலா குடும்பத்தினருக்கு இந்த வாரம் ராசிபலன் எப்படியிருக்கு பார்க்கலாமா?
ஐடி ரெய்டினால் அலறிக்கிடக்கின்றனர் சசிகலா குடும்பத்தினர். ஏய் பார்த்தாச்சு பார்த்தாச்சு இதெல்லாம் நாங்க அம்மா இருக்கும் போது 1996லேயே பார்த்தாச்சு என்று தினகரன் தில்லாக பேசினாலும் பாத்ரூமுக்குள் போய் கதவை மூடிக்கொண்டு அழுவது அனைவரின் கண்முன்னும் கற்பனையாக விரிகிறது.
ஆனான பட்ட ஜெயலலிதாவையே 75 நாட்கள் அப்பல்லோவில் வைத்து யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்ட எங்களுக்கு இதெல்லாம் எம்மாத்திரம் என்று உதார் விட்டாலும் தோண்ட தோண்ட வெளிவரும் பூதம் சசிகலா குடும்பத்தை விழுங்காமல் விடாது என்று கூறிகின்றனர் விபரம் அறிந்தவர்கள்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் டிடிவி தினகரனுக்கு ஜோதிடம் பார்க்கும் ஜோதிடர் ஒருவரின் வீட்டில் வருமானவரி அதிகாரிகள் ரெய்டு மேற்கொண்டனர். தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் சிக்கல் வரும் என்று ஜோதிடருக்கு முன்பே கணிக்கத் தெரியாதா என்று கேட்கின்றனர் சிலர். அதெல்லாம் விடுங்க . இந்த வாரம் இவங்களுக்கு எல்லாம் ராசிபலன் எப்படியிருக்கு தெரிந்து கொள்ளலாம்.

சசிகலாவிற்கு ராசிபலன்
சிறையில் வாழ்ந்தாலும் சிம்மாசன கனவோடு இருக்கும் உங்களுக்கு இந்த வாரம் மன உளைச்சல் அதிகமாகும். வடக்கு, தெற்கு என இரு திசைகளில் இருந்தும் வரும் செய்திகள் கெடட செய்திகளாகவே இருக்கும். உங்கள் லக்னாதிபதி நீசமாக இருக்கும் காலமாகையால் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது. மொத்தத்தில் நவகிரகங்களின் கோபப்பார்வையில் சிக்கியிருக்கிறீர்கள்.

திவாகரனுக்கு பலன்
அக்கா புண்ணியத்தில் அடியாளாக அரசியலில் அடியெடுத்து வைத்து இன்றைக்கு கல்வி தந்தையாக உயர்ந்திருந்தாலும் கடைசியில் ரெய்டு வந்து ஆட்டி படைக்கும் காலமாகிவிட்டது. ராகு கேது ஒரு பக்கம் சுற்றி வளைக்க, சனியின் பார்வை சங்கடத்தை தருகிறது. யாரையும் எதிர்த்து பேசாமல் இருப்பதே நல்லது.

டிடிவி தினகரன்
செவ்வாய் பலத்தில் மன தைரியத்தோடு இருந்தாலும் பிற கிரகங்களின் சேர்க்கையும், பார்வையும் உங்களுக்கு சாதகமாக இல்லை. எனவே வாயை மூடி பேசுவது ரொம்ப நல்லது. உறவினர்கள், நண்பர்கள் உங்கள் மீது அதீத கோபத்தில் இருக்கிறார்கள். எனவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

விவேக்கை விடாது கறுப்பு
புதன் யோகத்தில் மாமனார் தயவு, சந்திரன் புண்ணியத்தில் தாயாரின் தயவு கிட்டினாலும், பெரிய இடத்தில் செல்லப்பிள்ளையாக வளர்ந்து சுக்கிரன் புண்ணியத்தில் மிகப்பெரிய நிறுவனத்திற்கு தலைவராக அமர்ந்தாலும் விடாது கறுப்பாய் விரட்டுகிறது சனி. என்னதான் பரிகாரம் செய்தாலும் பாபத்திற்கு துணையாக இருந்திருந்தால் பலனை அனுபவித்துதான் ஆக வேண்டுமாம்.

உடல்நலம் பத்திரம்
கிரகங்களின் சேர்க்கை, பார்வையினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு தேறி வந்திருந்தாலும் நடக்கும் சம்பவங்கள் யாவும் நல்லதாக இல்லையே. சுற்றமும் நட்பும் படும் சங்கடங்கள் இந்த வாரத்தில் மன உளைச்சலை அதிகரிக்கும். ஆகவே கூடுதல் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம்.

வருஷம் முடியும் முன்பே
அரசன் அன்று கொல்வான் தெய்வன் நின்று கொல்லும் என்பது பழமொழி... ஆனால் இன்றைய கால கட்டத்தில் பாவத்திற்கு கூலி உடனே உடனே கிடைக்கிறது. உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும் என்பது விதி. சசிகலா குடும்பத்தினர் அனைவருக்குமே இது ரெய்டு வாரம்தான். இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை அவர்கள் நன்றாகவே உணர்ந்திருப்பார்கள்.












Click it and Unblock the Notifications