சசிகலா எப்படியெல்லாம் அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்தினார்... விலாவாரியாக உடைத்த கிருஷ்ணபிரியா
Recommended Video

சென்னை: ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சசிகலாதான் ஆட்சி, மற்றும் கட்சி நிர்வாகத்தில், முழுமையாக தலையிட்டதாக இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, ஆறுமுகசாமி கமிஷனில் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர், ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில், கிருஷ்ணபிரியா தனது தரப்பு வாக்குமூலத்தை அளித்திருந்தார்.
கிருஷ்ணபிரியா அளித்த வாக்குமூல அம்சங்கள் சில வெளியே வந்துள்ளன.

வேட்பாளர் பட்டியல்
இந்த வாக்குமூலத்தில், ஜெயலலிதாவின் கூடவே போயஸ் இல்லத்தில் தங்கியிருந்த, சசிகலா எப்படியெல்லாம், ஆட்சி மற்றும் அதிமுக கட்சி நிர்வாகத்தில் தலையிட்டார் என்பது குறித்து விவரித்துள்ளார் கிருஷ்ணபிரியா என்கின்றன தகவல்கள். 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அதிமுக வேட்பாளர்களை முழுமையாக இறுதி செய்ததே அவர்தான் என்று கிருஷ்ணபிரியா கூறியுள்ளாராம்.

பணியிடமாற்றம்
மேலும், சசிகலா சொல்லியபடிதான் ஜெயலலிதா ஆட்சியில், அதிகாரிகள் டிரான்ஸ்பர் நடந்துள்ளதாகவும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைமைச் செயலகம் என்பது மாநிலத்தின் சக்தி மையம். அங்கே பணியாற்றுபவர்கள் முதல்வர், அமைச்சர்களுடன் தினமும் தொடர்பில் இருக்க வாய்ப்புள்ள அதிகாரிகள். அப்படிப்பட்ட இடத்தில் பணிபுரியும் அதிகாரிகளையெல்லாம் சசிகலாதான் இறுதி செய்வார். தனக்கு தேவைப்படுவோரை, நெருக்கமானவர்களை அங்கே நியமிப்பார் என்றெல்லாம் கிருஷ்ணபிரியா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சி கட்டுப்பாடு
இந்த தகவல் அடிப்படையில் பார்த்தால், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது திரைமறைவு முதல்வராக இருந்தது சசிகலா ராஜாங்கம் நடத்தினாரா என்ற கேள்வி எழுகிறது. கட்சியினர் பலரும் சசிகலாவை சின்னம்மா என்று அழைத்தது, ஜெ. மறைவுக்கு பிறகு பல சீனியர்கள் அவர் காலில் விழுந்து கட்சியை தலைமை தாங்க அழைத்தது என்பதை வைத்து பார்த்தால் கட்சியும் அவர் கட்டுப்பாட்டில் இருந்ததை போன்ற தோற்றம் வருகிறது. கிருஷ்ணபிரியா வாக்குமூலத்தில் உண்மை இருப்பதாகவே தெரிகிறது.

பேசவில்லை
இருப்பினும், அப்போது ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும், இதை ஒரு பெரிய விஷயமாக பேசவில்லை என்பது வியப்புக்குரியதாக உள்ளது என்கிறார் ஒரு மூத்த பத்திரிகையாளர். இப்படிப்பட்ட சசிகலாவின் சாம்ராஜ்யம் இப்போது சரிந்துள்ளது பெரிய வியப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறுகிறார். இதனிடையே சசிகலாவுக்கான அதிகாரம், கட்சியிலும், ஆட்சியிலும், 2012 முதல் குறைக்கப்பட்டதாகவும் கிருஷ்ணபிரியா கூறியுள்ளார். எனவே ஜெயலலிதா தனது இறுதி காலத்தில், நடந்த விஷயங்களை திருத்திக்கொள்ள முயன்றுள்ளது தெளிவாகிறது.












Click it and Unblock the Notifications