ஜெ. மறைவுக்கு பின்பும் நடராஜனை போயஸ் கார்டனுக்குள் நுழைய தடை விதித்த சசிகலா- ப்ளாஷ் பேக்
ஜெ. மறைந்த பின்னரும் நடராஜன்னை போயஸ் கார்டனுக்குள் நுழைய தடை விதித்திருந்தார் சசிகலா.
சென்னை: பெங்களூரு சிறையில் இருந்து கணவருக்கு அஞ்சலி செலுத்த வருகிறார் சசிகலா. அவரை வரவேற்க சிறை வாசலில் தனி ஆளாக நின்று கொண்டிருக்கிறார் கர்நாடக புகழேந்தி.
தஞ்சாவூரில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா நடத்தி, அரசியல்ரீதியாக அதிரடிகளைக் கிளப்புவது நடராஜனின் வழக்கம். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவர்களின் கண்டிப்பான உத்தரவால் இந்த ஆண்டு பொங்கல் விழாவை அவர் கொண்டாடவில்லை.
சொந்த ஊரான விளாருக்குச் செல்லாமல், சென்னையிலேயே முழு ஓய்வில் இருந்தார். கார் இறக்குமதி மோசடி வழக்கில் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

நடராஜன் மரணத்தால் ஷாக்
இந்நிலையில், இதய நோய்த் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடராஜன், செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய திடீர் மரணத்தை அவருடைய உறவினர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கல்லீரல் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு ஐந்து மாதங்கள் மட்டுமே அவர் உயிருடன் இருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன், 'அறுவை சிகிச்சை நடந்தால் அதிக அளவில் ரத்தம் தேவைப்படும்' என மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்காக ரத்தம் கொடுக்க பெரும் படையே தனியார் மருத்துவமனை முன்பு குவிந்தது.

15 நாட்கள் பரோல்
' எங்கள் தலைவருக்காக எவ்வளவு ரத்தத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்' என மருத்துவமனை நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளனர். செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டதில் இருந்தே அவர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். சிறைத்துறை விதிகளின்படி ஏழு நாட்கள் முதல் 15 நாட்கள் வரையில் பரோல் விடுப்பு கிடைக்கலாம் என்பதால், பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை கண்காணிப்பாளர் சோமசேகரிடம் மனுவைக் கொடுத்தார் வழக்கறிஞர் அசோகன். சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் கிடைத்தது. இதுகுறித்து நம்மிடம் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ஒருவர், ' தஞ்சாவூர், விளார் கிராமத்துக்குச் செல்வதற்கு அனுமதி கேட்டு மனு கொடுத்தோம். சிறைக் கைதிகளுக்கான விடுமுறையில் இருந்து பரோல் விடுப்பு கழிக்கப்படும். நடராஜன் உடல்நிலை மோசமடைந்துவிட்டது என்ற தகவல் கிடைத்த நாளிலேயே, சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். வினய் குமார் அறிக்கை, சத்யநாராயண ராவ் வாக்குமூலம் என சசிகலாவுக்கு எதிராகப் பல விஷயங்கள் இருந்தன. அதனால்தான், அவருக்குப் பரோல் வழங்குவதற்கு காலதாமதம் செய்தனர்.

நடராஜனுக்கு தடை விதித்த சசி
இதனையடுத்து, நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தோம். நடராஜன் இறந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியானதையடுத்து, இறப்பு சான்றிதழையும் சிறைத்துறை அதிகாரிகளிடம் கொடுத்தோம். இதனால் பரோல் கிடைத்தது. ஜெயலலிதா இறந்த பிறகும், போயஸ் கார்டனுக்குள் நடராஜனை வர வேண்டாம் என உறுதியாகக் கூறிவிட்டார் சசிகலா.

அக்கா இருந்த நிலையே..
' அக்கா இருந்தபோது என்ன நிலை இருந்ததோ, அதுவே தொடரட்டும்' என நடராஜனிடம் தெரிவித்துவிட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்றபோது, சிறை வாசல் வரை வந்து வழியனுப்பினார் நடராஜன். ' நீ எதற்கும் கலங்காதே...நான் பார்த்துக் கொள்கிறேன்' என ஆறுதலோடு கூறிவிட்டுச் சென்றார். கடந்தாண்டு அக்டோபர் மாதம் கல்லீரல் மாற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது, மருத்துவமனைக்கே சென்று பார்த்தார் சசிகலா. ' உங்கள் உடல்நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள்' எனக் கண்கலங்கப் பேசினார். அவர் இறந்துவிட்டதை சசிகலாவால் நம்ப முடியவில்லை" என்றார் வேதனையுடன்.












Click it and Unblock the Notifications