ஜெ. படுக்கை அறையை மட்டும் பயன்படுத்த தயங்கும் சசிகலா- விரைவில் போயஸ் கார்டனில் பூஜை?
ஜெயலலிதாவின் அனைத்து பொருட்களையும் பயன்படுத்துகிறார் சசிகலா. ஆனால் போயஸ் கார்டன் படுக்கை அறையை மட்டும் பயனபடுத்த தயங்குவதாக கூறப்படுகிறது.
சென்னை: போயஸ் கார்டன் பங்களாவில் ஜெயலலிதா பயன்படுத்தும் அனைத்து பொருட்களை சசிகலா நடராஜன் பயன்படுத்துகிறார். ஆனால் அவரது படுக்கை அறையை பயன்படுத்த சசிகலா தயங்குவதாகவும் இதனால் கார்டனில் விரைவில் பிரமாண்ட பூஜை நடைபெற உள்ளதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜன், அக்கட்சி பொதுச்செயலராக 'நியமிக்கப்பட்டார். இதையடுத்து அதிமுக பொதுச்செயலராக பதவியேற்க வந்த சசிகலாவை பார்த்து அதிர்ச்சியடைந்தனர் பொதுமக்கள்.
ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அவரது சீட்டில் அமர்ந்தபடி உற்சாகமாக வந்திறங்கினார் சசிகலா. ஆனால் திடீரென சோக மனநிலைக்கு மாறியவராக காட்டிக் கொண்டார்.
எல்லாமே செயற்கைதனம்
ஜெயலலிதாவைப் போலவே தமது உடை, சிகை அலங்காரம், பொட்டு அனைத்திலும் காட்டிக் கொண்டார் சசிகலா. ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மெதுவாக நடந்தார்... ஆனால் சசிகலாவும் ஜெயலலிதாவைப் போல தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக மெதுவாக கை கூப்பியபடியே செயற்கைத்தனமாகவே நகர்ந்து நடந்து சென்றார்.
தட்டு தடுமாறிய பேச்சு
ஜெயலலிதா பாணியில் எழுதி வைத்து கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்றினார் சசிகலா. பல இடங்களில் சொற்களை எப்படி உச்சரிப்பது என கூட தெரியாமல் தட்டு தடுமாறினார்.
படுக்கை அறை...
இப்படி எல்லாவற்றிலும் ஜெயலலிதாவை பின்பற்றும், பயன்படுத்தும் சசிகலா, அவரது படுக்கை அறையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகிறாராம்.. அங்கே படுத்தாலும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு பின்னர் அங்கே அவரால் நிம்மதியாக தூங்க முடியவில்லையாம்.
கார்டனில் பூஜை
இதனால் விரைவில் போயஸ் கார்டனில் பிரமாண்ட பூஜை ஒன்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக கேரளா ஜோதிடர்கள் உள்ளிட்டோரை அழைத்துவரும் பணியில் மன்னார்குடி தரப்பு படுபிஸியாக இருக்கிறதாம்.