தூபம் போட்ட 'துண்டு' தலைவர்... முதல்வர் பதவி எனக்கே.. நடராஜன் திடீர் அதிரடி
முதல்வர் பதவியில் அமர நடராஜனும் கோதாவில் குதித்துவிட்டார்ர். ஆனால் சசிகலாவோ நானே முதல்வராவேன் என அடம்பிடிக்கிறாராம்.
சென்னை: முதல்வர் பதவியை தமக்கே விட்டுத் தர வேண்டும் என்று சசிகலாவின் கணவர் நடராஜன் திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளதால் போயஸ் கார்டன் பங்களா களேபரமாகி வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எப்படியாவது முதல்வர் நாற்காலியில் அமர்ந்தே தீருவது என்பதில் படுதீவிரமாக இருக்கிறார் சசிகலா. பதவி பேராசையால் சசிகலா, எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒருநாளாவது முதல்வர் நாற்காலியில் அமர்ந்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
தூபம் போடும் துண்டு தலைவர்
இதனிடையே சசிகலா கணவர் நடராஜனிடம், நீங்களே முதல்வராகிவிடுங்கள் என அரசியலில் குழப்பமான நிலையை மேற்கொண்டு வரும் ஒரு துண்டு தலைவர் தூபம்போட்டபடியே இருக்கிறாராம். அதாவது சசிகலா முதல்வர் நாற்காலியில் அமர்ந்தால் குடும்ப உறவுகள் அனைத்தும் ஆளுக்கு ஒரு அதிகார மையங்களாகிவிடுவர்; மத்திய அரசு உங்களை நசுக்க ஏதுவாகிவிடும்; ஆகையால் நீங்கள் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தால் உங்கள் உறவுகளை நீங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஒரே அதிகார மையமாக செயல்படலாம் என்று அந்த தலைவர் தூபம் போட்டிருக்கிறார்.
சசியுடன் மல்லுக்கட்டு
அவரது இந்த கருத்தை 'மூத்த' ஒரு அரசியல்வாதியும் ஆமோதிக்கிறாராம். நமக்கு வேண்டிய இரு தலைவர்களுமே இப்படி சொன்னால் சரியாக இருக்கும் என்பதால் இப்போது முதல்வர் பதவியை எனக்கே விட்டுத் தர வேண்டும் என சசிகலாவிடம் மல்லு கட்டியிருக்கிறார் நடராஜன்.
விட்டுக் கொடுக்க மறுக்கும் சசி
ஆனால் சசிகலாவோ, ஒருநாளாவது முதல்வர் நாற்காலியில் அமர்ந்தே தீருவேன் என அடம்பிடித்து வருகிறாராம். இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் நடராஜன் அந்த துண்டு தலைவரிடம் புலம்பியிருக்கிறார்.
நான் தூதராக பேசுகிறேன்...
இருந்தபோதும் மத்திய அரசிடம் நான் பேச முயற்சிக்கிறேன்... நீங்கள் முதல்வரானால் மத்திய அரசுக்கு அனுசரணையாக நடந்துகொள்வீர்கள் என வாக்குறுதி தர முயற்சிக்கிறேன் என துண்டை இழுத்துப் போட்டு சபதம் போடாத குறையாக பேசினாராம் அந்த தலைவர். நடராஜனின் இந்த முயற்சி அதிமுக எம்எல்ஏக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம்.