எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்க சசிகலாதான் காரணம்- செல்லூர் ராஜூ
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்க சசிகலாதான் காரணம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக இருக்கக் காரணமே சசிகலாதான் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
பிளவுபட்டுள்ள கட்சி ஒன்றுபடவே தனது பெயர் தினகரன் கூட்ட அழைப்பிதழில் போடப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி- தினகரன் அணியினரின் மோதல் முற்றி வரும் நிலையில் மேலூரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார் டிடிவி தினகரன்.
இந்த கூட்டத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர் பங்கேற்றனர். அமைச்சர்கள் ஆர்.பி.உதய குமார்-செல்லூர் ராஜூ ஆகியோரின் பெயர்கள் தினகரன் கூட்ட அழைப்பிதழில் இடம் பெற்றிருந்தன. இதே போல மதுரை புறநகர் மாவட்ட செயலாளரான ராஜன்செல்லப்பாவின் பெயரும் அழைப்பிதழில் இடம் பெற்றுள்ளது.
இவர்களில், செல்லூர் ராஜூ மதுரை மாநகர் மாவட்ட அதிமுக அம்மா அணியின் செயலாளராக உள்ளார். ஆர்.பி.உதயகுமார், ஜெயலலிதா பேரவை செயலாளராக இருந்து வருகிறார்.
இவர்கள் இருவரும் சசிகலாவின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தனர். கடந்த 4 மாத காலத்தில் இருவருமே எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக மாறிவிட்டனர்.
தினகரன் அழைப்பிதழில் பெயர்
விழா நடக்கும் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, மேலூரில் தினகரன் அணியினர் நடத்தும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு தனக்கு அழைப்பு வந்துள்ளதாகவும், முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
எடப்பாடி அணி புறக்கணிப்பு
ஆலோசனைக்குப் பிறகு, அழைப்பிதழில் பெயர் போட்டிருந்தாலும் கூட்டத்தில் கலந்து கொண்டால் தேவையில்லாத சர்ச்சைகளும் குழப்பங்களும் ஏற்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி அணியினர் தினகரன் நடத்திய கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
தினகரன் ஆவேசம்
இதனிடையே கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், முதல்வர், அமைச்சர்களின் செயல்பாடுகளை கடுமையாகவே தாக்கி பேசினார். அட்டைகத்தி சண்டை போடவேண்டாம் என்றும் கூறினார்.
சசிகலாவே காரணம்
இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, கட்சி ஒன்றுபட வேண்டும் என்பதற்காகவே தனது பெயர் டிடிவி தினகரன் பொதுக்கூட்ட அழைப்பிதழில் போடப்பட்டதாக கூறினார். இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்க காரணம் சசிகலாதான் என்று செல்லூர் ராஜூ கூறினார்.