பட்ஜெட் குறித்து ஆலோசனை? அதிமுக எம்பிக்களை இன்று சந்திக்கிறார் சசிகலா!
அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் இன்று மாலை கூடுகிறது.
சென்னை: அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது. கூட்டத்தில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதிமுக எம்.பிக்கள் எவ்விதம் செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக பிப்ரவரி கடைசி வாரத்தில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும். அதே மாதம் கடைசி நாளுக்கு முந்தைய நாளில் ரயில்வே பட்ஜெட்டும் கடைசி நாளில் பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இதனால் பட்ஜெட் நடைமுறைகள் அனைத்தும் மே மாதத்தில்தான் முடிவடையும்.

ஆனால், இந்தாண்டு வரும் 31-ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடரை கூட்டவும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, நாடாளுமன்ற கூட்டம் வருகிற 31-ம் தேதியன்று கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், அன்றைய தினம் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துவார். அதனைத் தொடர்ந்து, மறுநாளான பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் இன்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதிமுக எம்.பிக்கள் எவ்விதம் செயல்பட வேண்டும் என்பது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இன்று மாலை 4 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications