சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பில் பயம்... 20-ம் தேதி வரை முதல்வராக பொறுப்பேற்க போவதில்லையாம் சசி
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வரும் 20ம் தேதிக்கு மேல்தான் முதல்வராக பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வரும் 20ஆம் தேதிக்கு மேல்தான் முதல்வராக பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு பாதகமாக வந்துவிடுமோ என்ற அச்சத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதலமைச்சராகப் பதவியேற்கும் முடிவை 20-ம் தேதிவரை அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தள்ளிவைத்துள்ளார். இது மேலும் தள்ளிப்போகலாம் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே இந்த வழக்கு முடிக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது. இதனால் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு தனக்கு சாதகமாகத்தான் வரும் என சசிகலா தீர்க்கமாக நம்பி வந்தார்.
இந்நிலையில் தற்போது ஜெயலலிதா மறைவால் இந்த வழக்கில் தீர்ப்பு தனக்கு பாதகமாக வருமோ என சசிகலா அச்சமடைந்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி என்பவரை சசிகலா தரப்பு டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக 20 தேதி வரை தான் முதல்வராக பதவியேற்க போவதில்லை என சசிகலா முடிவு செய்துள்ளாராம். தீர்ப்பு தேதி தள்ளிப்போனால் முதல்வராக பதவியேற்கும் நாள் மேலும் தள்ளிப்போகும் என்றும் அதிமுக வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு ஒருவழியாக முதல்வராக பதவியேற்றுக்கொள்ளலாம் என சசிகலா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.