15 நாட்கள் பரோலில் வெளியே வந்துள்ள சசிகலாவுக்கு சிறைத்துறை கடும் நிபந்தனைகள்!
கணவர் நடராஜனின் இறுதிச் சடங்கு மற்றும் ஈமச்சடங்கு காரியங்களை செய்வதற்காக சசிகலா 15 நாட்கள் பரோல் கேட்கிறார்.
Recommended Video
சென்னை: கணவர் நடராஜனின் இறுதிச் சடங்கு, ஈமச்சடங்கில் பங்கேற்பதற்காக 15 நாட்கள் சிறை விடுப்பு பெற்று சசிகலா சிறையில் இருந்து வெளி வந்துள்ளார். சாலை மார்க்கமாக தஞ்சாவூர் புறப்பட்டுள்ள சசிகலாவிற்கு பல்வேறு நிபந்தனைகளை சிறைத்துறை விதித்துள்ளது.
முதலில் பரோல் மறுப்பு
செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு நடராஜன் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கட்டார். கணவரை பார்க்க வர சசிகலா கடந்த 2 நாட்களாக பரோல் கேட்டு முயற்சித்தார், ஆனால் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை பரோல் வழங்கவில்லை.
நடராஜன் மரணம்
இந்நிலையில் அதிகாலை 1.35 மணியளவில் ம. நடராஜனின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனையடுத்து நடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வர சசிகால சிறைத்துறையிடம் 15 நாட்கள் பரோல் கோரி இருந்தார்.
15 நாட்கள் பரோல்
காலை 8.30 மணிக்கு பரோல் மனுவில் சசிகலாவின் கையெழுத்தை பெற்று பரோல் மனுவுடன் நடராஜனின் இறப்பு சான்றிதழும் இணைத்து சிறைத்துறையிடம் வழங்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட பெங்களூரு சிறைத்துறையினர் உடல்பரிசோதனைக்குப் பின்னர் சசிகலாவிற்கு 15 நாட்கள் பரோல் விடுப்பு அளித்தனர்.
தஞ்சாவூர் விரைகிறார்
சிறைத்துறையின் நடைமுறைகள் முடிந்த பின்னர் சசிகலா பிற்பகலில் சிறையில் இருந்து வெளிவந்தார். அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக சசிகலா தஞ்சாவூர் சென்று கொண்டிருக்கிறார். காரில் சசிகலாவுடன் புகழேந்தி மற்றும் சில கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.
சிறைத்துறையின் நிபந்தனைகள்
சசிகலாவிற்கு பரோல் காலத்தில் கடைபிடிக்க சில நிபந்தனைகளையும் சிறைத்துறை விதித்துள்ளது. இதன்படி பரோல் காலத்தில் சசிகலா தஞ்சாவூரை விட்டு வெளியே செல்லக்கூடாது, ஊடகங்களை சந்திக்கக் கூடாது, பொதுக்கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 3 பிற்பகலில் சிறைக்கு திரும்ப வேண்டும்
இதே போன்று அரசியல் தலைவர்களை சந்திக்கக் கூடாது, செல்போன் பயன்படுத்தக் கூடாது. பரோல் முடிந்து ஏப்ரல் 3ம் தேதி பிற்பகலுக்கு பெங்களூரு சிறைக்கு திரும்ப வேண்டும் எனவும் சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.