அதிமுகவே தமிழகத்தை என்றும் ஆள வேண்டும்.. தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேச்சு
சென்னை: அதிமுகவே தமிழகத்தை என்றும் ஆள வேண்டும் என கூவத்தூரிலிருந்து போயஸ் கார்டன் வந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா கூறினார்.
கூவத்துார் ரிசார்ட்டில் இருந்து புறப்பட்ட சசிகலா சென்னை போயஸ் இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். அவருடன் அதிமுக அவைத்தலைவர் செங்கோட்டையனும் போயஸ் கார்டனுக்கு வருகை தந்தார். அப்போது அங்கு கூடியிருந்த கட்சி தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேசியதாவது: எந்த கூண்டில் இருந்தாலும் அதிமுகவை சிறப்பாக வழி நடத்த என்னால் முடியும். என் இதயத்தில் இருந்து அதிமுகவை பிரிக்க முடியாது.
அதிமுக தான் என்றும் தமிழகத்தை ஆள வேண்டும். நான் எதற்கும் பயப்பட வில்லை. அனைவரும் தைரியமாக இருங்கள். நம்மை யாரும் எதுவும் செய்து விட முடியாது. எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அண்ணா சொல்லி உள்ளார். அதன்படி, சிங்கம் போல் நம் ஜெயலலிதா இருந்தார். அவரை போல் நாமும் சிங்கங்களாக இருப்போம். நான் எங்கிருந்தாலும் கட்சிப் பணிகளையும் உங்களை பற்றியும் கேட்பேன். இவ்வாறு சசிகலா கூறினார்.