கூவத்தூரில் இருந்து புறப்பட்ட சசிகலா... சிறைக்கு செல்ல உள்ளதால் அழுது உருகிய எம்எல்ஏக்கள்
பெங்களூரூ நீதிமன்றத்தில் சசிகலா சரணடைய இருப்பதால் நேற்றிரவு கூவத்தூரில் இருந்து புறப்பட்ட அவருக்கு அவரது ஆதரவாளர்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர்.
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளி என அறிவித்த உச்சநீதிமன்றம் 3 பேரையும் உடனடியாக சரணடைய ஆணையிட்டது. இதையடுத்து கூவத்தூரில் இருந்து நேற்றறிரவு போயஸ்கார்டன் புறப்பட்ட சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தனர்.
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அப்போது சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேரும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிமன்றம், 2015ஆம் ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கெல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது.
ஜெயலலிதா தற்போது உயிரோடு இல்லை என்பதால் அவர் விடுவிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து சசிகலா உள்ளிட்ட 3 பேரும் உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆனால் நேற்று முன்தினம் இரவே கூவத்தூர் சென்ற சசிகலா அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்கள் மூலம் அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதையடுத்து நேற்றிரவு 10 மணியளவில் கூவத்தூரில் இருந்து அவர் தங்கியிருந்த போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டிற்கு புறப்பட்டார்.
அப்போது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் சசிகலா உருக்கமாக பேசினார். இதையடுத்து அவரை சுற்றியிருந்த ஆதரவு எம்எல்ஏக்கள் அழுது புரண்டனர். இதனால் தானும் அழுத சசிகலா ஆதரவாளர்களை சமாதானப்படுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.